"முதலை கண்ணீர்.." அடம் பிடித்து நாடகமாடும் ஆளுநர்..! விளாசி தள்ளிய சிபிஎம் பாலகிருஷ்ணன்
சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களைத் தமிழக அரசு நியமிக்கும் சட்ட மசோதா தொடர்பான விவகாரத்தில், ஆளுநரை சிபிஎம் கடுமையாகச் சாடியுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் 13 பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் மூலம் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இருப்பினும், இதில் சமீப காலமாகச் சர்ச்சை ஏற்பட்டது.
பொதுவாகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 3 பேரைத் தேர்வுக்குழு ஆளுநருக்குப் பரிந்துரைக்கும்.

புதிய மசோதா
அவர்களிடம் நேர்காணல் நடத்தி ஒருவர் துணை வேந்தராகத் தேர்வு செய்யப்படுவார். இதனிடையே துணை வேந்தர் தேர்வில் ஆளுநர் தமிழக அரசிடம் கலந்தாலோசிப்பதில்லை என்று கூறிய, தமிழக பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் வகையிலான புதிய மசோதாக்கள் தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே, மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற சட்டம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

விளக்கம்
இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ள நிலையில், இது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கடிதம் எழுதி இருந்ததாக நேற்றைய தினம் தகவல் வெளியானது. இது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆளுநர் செயல்பாடுகளை சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநர் அடம் பிடித்து நாடகம் ஆடுகிறார்! பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் அடாவடித்தனத்தின் தொடர்ச்சியே இது. குஜராத், தெலங்கானா மாநிலங்களில் துணை வேந்தர் நியமனத்தை மாநில அரசுகளே மேற்கொள்கின்றன.

முதலை கண்ணீர்
அங்கு UGC விதிமுறைகளின்படியே நியமனங்கள் நடக்கின்றன. அதையே தமிழ் நாட்டிலும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், மசோதா நிறைவேறினால் 'அரசியல் தலையீடு' வந்துவிடும் என ஆளுநர் முதலைக் கண்ணீர் வடித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநர் மேற்கொண்ட முறைகேடான துணை வேந்தர்களை நீதிமன்றம் தலையிட்டு பதவி நீக்கம் செய்ததே! அதனை என்னவென்பது?

கல்விக் கொள்கை
மாநிலப் பல்கலைக்கழகத்தில், ஜனநாயக விரோதமான அரசியலை புகுத்துவதே ஆளுநர்தான். துணை வேந்தர்களுக்கு தனி மாநாடு நடத்துவது, உயர்கல்வித் துறை அமைச்சரையே ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழா நடத்துவது என்று தனி ராஜ்ஜியம் நடத்த முயன்றார். உயர்கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்குவதும், மாநில அரசின் கொள்கைக்கு மாறாக புதிய கல்விக் கொள்கையை திணிக்கவும் தொடர்ந்து முயற்சிக்கிறார்.

அனுமதி அளிக்க வேண்டும்
இந்த பின்னணியில்தான் மாநில அரசுக்கு புதிய சட்டம் நிறைவேற்றிடும் தேவை எழுந்தது. எனவே, ஆளுநர் தனது நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை குறுக்கு வழியில் பறிக்க முயற்சிக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் தொடர் கொட்டத்தை சி.பி.ஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது. மாநில அரசின் சட்டத்திற்கு உடனே அனுமதியளிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications