யாரின் சதி? கோயில் பணத்தில் கல்லூரி.. 2017ல் எடப்பாடி பழனிசாமி செய்த சம்பவம்.. பாய்ந்து வந்த சிபிஎம்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை பணத்தில் 2017ஆம் ஆண்டு திண்டுக்கல் பழநியாண்டவர் தொழில்நுட்ப கல்லூரி கட்டிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருப்பது தொடர்பாக சிபிஎம் கனகராஜ் விமர்சித்துள்ளார். இந்த செயலுக்கு பின் யாருடன் சதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். கோவையில் நேற்று மக்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அறநிலையத் துறையின் கைகளில் பணம் இருப்பதை திமுகவால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அவர்களின் கண்களை உறுத்துகிறது. கோயில்களை கண்டாலே திமுகவினருக்கு பிடிப்பதில்லை.

அதனால், கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகின்றனர். மக்கள் உண்டியலில் பணத்தைப் போடுவது கோயிலை விரிவாக்கம் செய்வதற்குத்தான். நாங்கள் அனைத்துக் கல்லூரிகளையும் அரசு பணத்தில்தான் கட்டினோம். அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகளைக் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இதை அதிமுக ஒரு சதிச் செயலாக பார்க்கிறது என்று பேசி இருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு பாஜகவின் குரலாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பாஜக தரப்பில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை இருக்காது என்று கூறி வருகின்றனர். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் கருத்தை கண்டித்து கபாலீஸ்வரர் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அறநிலையத்துறை நிதியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, பழநியாண்டவர் தொழிற்நுட்ப கல்லூரிக்கான நிர்வாக கட்டிடத்தை திறந்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியான கனகராஜ், இது யாருடைய சதி எடப்பாடி பழனிசாமி சார்? பழநி அருள்மிகு பழநியாண்டவர் பாலிடெக்னிக் எல்லாம் கட்டியது யார்? கோயில் பணமா? இல்லை அரசுப் பணமா? தாங்கள் ஆட்சியிலிருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அவரது தலைவர்களும் கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டிடங்கள் கட்டியதும் சதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 2017ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி பழநியாண்டவர் தொழிற்நுட்ப கல்லூரியின் நிர்வாகக் கட்டிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கல்லூரி நிர்வாகத்தில் கற்களால் செய்யப்பட்ட அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டு கேள்வி எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications