கிரெடிட் கார்டு ரூல்ஸ் மாறுகிறது.. ஏப்ரல் 1 முதல் பலருக்கு வரம் சிக்கல்? பான் கார்டு இனி கட்டாயம்
சென்னை: இந்தியாவில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் சில முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கின்றன.. பணப் பரிவர்த்தனைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்கும், வரி ஏய்ப்பு மற்றும் போலி கணக்குகளைத் தடுப்பதற்கும் மத்திய அரசு மற்றும் வங்கிகள் இணைந்து இந்த மாற்றங்களை கொண்டு வர உள்ளன.. இதனால் இனி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் மக்களுக்கு சில புதிய விதிகள் மற்றும் கண்காணிப்புகள் இருக்கும்.. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
முதலாவது முக்கிய மாற்றம் என்னவென்றால், இனி புதிய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது பான் கார்டு கட்டாயமாகிறது.. பான் கார்டு இல்லாமல் இனி வங்கிகள் கிரெடிட் கார்டு வழங்க மாட்டார்கள்..

கிரெடிட் கார்டு ரூல்ஸ்
இதனால் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் அனைத்து செலவுகளும் வருமான வரித்துறையின் கண்காணிப்புடன் இணைக்கப்படும்.. இதன் மூலம் போலியான வங்கி கணக்குகள் உருவாகுவது குறையும் என்றும், கிரெடிட் கார்டு தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது..
அடுத்த முக்கியமான விஷயம், அதிக தொகை செலவுகளைப் பற்றியது.. ஒரு நிதியாண்டில் கிரெடிட் கார்டு மூலம் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ரொக்கமில்லாமல் செலவு செய்தால், அந்த தகவலை வங்கிகள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்..
பான் கார்டு கட்டாயம்
அதேபோல் கிரெடிட் கார்டு பில் கட்டும்போது ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக செலுத்தினாலும் அந்த தகவலும் அதிகாரிகளுக்கு தெரிய வரும்.. பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. ஆனால் இந்த விதி முற்றிலும் புதியது அல்ல.. இது முன்பே வருமான வரி விதிகளில் இருந்தாலும் இப்போது அதை மேலும் தீவிரமாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது..
மேலும் ஒரு புதிய வசதி என்னவென்றால், இனி கிரெடிட் கார்டு மூலம் வருமான வரியையும் செலுத்த முடியும்.. இது வரி செலுத்துவோருக்கு வசதியாக இருக்கும்.. ஆனால் இதற்காக சில வங்கிகள் செயலாக்க கட்டணம் அல்லது வட்டி வசூலிக்கலாம் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்..
வருமான வரி
இதற்கிடையில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் கார்ப்பரேட் கிரெடிட் கார்டுகளிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.. அலுவலக வேலைக்காக கொடுக்கப்பட்ட அந்த கார்டை ஊழியர்கள் தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தினால், அந்த தொகை அவர்களின் வருமானமாகக் கருதப்பட்டு அதற்கு வரி விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது..
எனவே அலுவலக செலவுகளையும், தனிப்பட்ட செலவுகளையும் தனித்தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..
சலுகைகள்
இதில் ஒரு சலுகையும் உள்ளது.. கடந்த 3 மாதங்களில் கிடைத்த கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட்டை பான் கார்டு விண்ணப்பிக்கும் போது முகவரி சான்றாக பயன்படுத்தலாம்.. இதனால் தனியாக address proof தேட வேண்டிய அவசியம் குறையும்..
மொத்தத்தில் ஏப்ரல் 1 முதல் வரும் இந்த மாற்றங்கள் பணப் பரிவர்த்தனைகளை வெளிப்படையாக மாற்றவும், வரி ஏய்ப்பை குறைக்கவும் உதவும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.. கிரெடிட் கார்டு பயன்படுத்தும் மக்கள் இனி தங்களது செலவுகளில் சிறிது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது..!!












Click it and Unblock the Notifications