காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை கத்தியால் குத்த முயற்சி.. கரூர் அருகே பரபரப்பு
சென்னை: கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கத்திமுனையில் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் சிட்டிங் எம்பியான தம்பிதுரை போட்டியிடுகிறார்.
ஒருபக்கம் செந்தில் பாலாஜி திமுக கூட்டணிக்கு பலம் என்றால், அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுகவுக்கு தூணாக நிற்கிறார்.
9 வருஷமாச்சு.. நல்ல தண்ணியை பார்த்து.. இதுல எலக்ஷன் ஒரு கேடா.. குடங்களுடன் கொந்தளித்த மக்கள்
கத்தியை காட்டி மிரட்டல்
பெரும் ஜாம்பவான்கள் ஆதரவுடன் இரு வேட்பாளர்களும் களத்தில் இருப்பதால், கரூர் தொகுதியே கொந்தளித்துப்போய்தான் கிடக்கிறது. இந்த நிலையில்தான் ஒரு அசம்பாவித சம்பவம் அங்கே அரங்கேறியுள்ளது. அரவக்குறிச்சி அருகே லிங்கநாயக்கன்பட்டியில் ஜோதிமணி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது இரு வாலிபர்கள், ஜோதிமணியை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
காவல்துறை விசாரணை
மிரட்டல் குறித்து, அரவக்குறிச்சி காவல்நிலையத்தில், ஜோதிமணி ஒரு புகார் கொடுத்துள்ளார். ஜோதிமணியின் அருகே இருந்த கட்சி பிரமுகர்கள், மிரட்டல்கார நபர்களான இருவரையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோதிமணி தனது புகாரில், கூறியுள்ளார்.
|
ஜோதிமணி பேட்டி
ஜோதிமணி இதுபற்றி நிருபர்களிடம் கூறுகையில், பிரச்சாத்தில் இருந்த எங்களை மறித்த இரண்டு பேர் இங்கு பிரச்சாரம் செய்யக்கூடாது. அமைச்சர் உங்களை உள்ளே விடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார் என்றார். அதற்குள் கூட இருந்த மற்றொருவர் கத்தியை எடுத்து குத்து என்றார். எனவே, அதிர்ச்சியடைந்த எங்கள் கட்சிக்காரர்கள், மிரட்டல் விடுத்தவர்களை, பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரித்தபோது அவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் இல்லை என தெரியவந்தது. மிரட்டிய ஒருவர் பெயர், திருமூர்த்தி மற்றொருவர் பெயர், பெரியசாமி என்று தெரியவந்தது என்றார்.
|
குற்றச்சாட்டு
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், தோல்வி பயத்தில் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரையும், அமைச்சர் விஜயபாஸ்கரும் அடியாட்களை ஏவி விட்டு இருக்கிறார்கள். தம்பிதுரை போகும் இடமெல்லாம் மக்கள் விரட்டி அடிக்கின்றனர். என்னை மக்கள் அன்பாக வரவேற்கின்றனர். அந்த விரக்தியில் தம்பிதுரை எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி விட்டார். இவ்வாறு கூறியுள்ளார் ஜோதிமணி.