வீதி முழுக்க பரவிய கச்சா எண்ணெய்.. அரிப்பு, கண் எரிச்சல்.. என்ன செய்வது? கலங்கும் எண்ணூர் மக்கள்
சென்னை: எண்ணூர் பகுதியில் வெள்ளநீருடன் கச்சா எண்ணெய் கலந்து வருவதால் தோல் நோய் கண் எரிச்சல் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எங்களை யாரும் வந்து பார்க்கவில்லை ஏன் என்றும் கேட்கவில்லை என்றும் பொதுமக்கள் குமுறுகின்றனர்.
மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இயல்பு நிலை எப்போது திரும்பும் என்று மக்கள் தவித்து வரும் நிலையில் மழை நீரோடு கழிவு நீரும் கலந்து அதோடு கச்சா எண்ணெயும் கலந்து கறுப்பு நிறமாகியுள்ளது.

வடசென்னை திருவொற்றியூரை அடுத்த பிருந்தாவன் நகர், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரோடு கலந்த கச்சா எண்ணெய் கலந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வடச்சென்னை எண்ணூர் பகுதியைச் சுற்றி இரண்டு பெரும் அனல் மின்நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் என 38-க்கும் மேற்பட்ட ஆபத்தான தொழிற்சாலைகள் இருக்கின்றன. எண்ணூர் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் வெளியேற்றப்படும் கச்சா கழிவு எண்ணெய்தான் மழை வெள்ளநீருடன் கலந்துள்ளது.
சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் பிருந்தாவன் நகரில் தேங்கிய மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், வீடுகளில் எண்ணெய் பிசுக்குகள் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் இங்கு மின் விநியோகம் செய்யப்பட்டதால் தீப்பற்றி விடுமோ என அச்சம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடுங்கையூர் கார்கில் நகரில் கச்சா எண்ணெய் கலப்பு தொடர்பாக குழு ஆய்வு மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. ஆய்வுக்குழு எண்ணெய் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவை மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை சேர்ந்தது என தெரியவந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை பெட்ரோலிய நிறுவன வளாகத்தில் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை வெளியேற்றும்போது, ஆலை வளாகத்தில் பூமிக்கு அடியில் சேகரிக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெயும் வெளியேறியுள்ளது.
கச்சா எண்ணெய் கலந்த கழிவுநீரை அகற்ற சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் விரைவில் அகற்றப்படும் என அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும் தண்டையார்பேட்டை பகுதியில் இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கச்சா எண்ணெயும் கலந்துள்ளது." என்று விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "எர்ணாவூரில் தண்ணீரில் கலந்து வந்த கச்சா எண்ணெய் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை எர்ணாவூரில் மழை வெள்ளத்தில் கலந்துவந்த கச்சா எண்ணெய் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மழை, வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய் ஆய்வுக்காக எடுக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்றுவருவதாக கூறினார்.
மழை வெள்ள நீர் தேங்கியுள்ளதால் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும், பால் கிடைக்கவில்லை, உணவு சமைக்க முடியவில்லை. கச்சா எண்ணெய் கலந்ததால் கண் எரிச்சலும் தோல் அரிப்பும் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுவரை எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் பொதுமக்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications