நாடு முழுக்க.. முடங்கிய எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவை.. கடுப்பான வாடிக்கையாளர்கள்! என்ன நடந்தது?
சென்னை: நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கி சேவை முடங்கியுள்ளதால் அதன் பயனாளர்கள் பணத்தை கட்ட முடியாமலும், எடுக்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.
நாட்டின் மிகப்பெரிய வங்கி சேவையில் எஸ்பிஐ வங்கியும் ஒன்று. முந்தைய காலத்தை போல அல்லாது தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது இயல்பாகிவிட்டது. இப்படி இருக்கும் சூழலில்தான் நேற்று முதல் எஸ்பிஐ வங்கியின் யுபிஐ பரிவர்த்தனை, யோனோ பேங்கிங், நெட் பேங்கிங் போன்ற சேவைகள் முடங்கியுள்ளன. எனவே இந்த சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஏற்கனவே எஸ்பிஐ சார்பில் இது தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. இந்த அறிவிப்பில் ஏப்ரல் 1ம் தேதியன்று மட்டும் பிற்பகல் 1.30 தொடங்கி மாலை 4.45 மணி வரை யோனோ பேங்கிங் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது என்று அறிவித்திருந்தது. ஆனால் நேற்று தொடங்கி இன்று வரை இந்த பிரச்னை நீடித்து வருவதால் வாடிக்கையாளர்கள் சோஷியல் மீடியாக்களில் இது தொடர்பாக புகார் அளித்து வருகின்றனர். நாடு முழுவதும் எஸ்பிஐக்கு என ஏறத்தாழ 45 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் இந்த சேவை பாதிப்பு அனைவரையும் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ, "நிதியாண்டின் இறுதி கணக்குகள் எடுக்கப்பட்டு வருவதால்தான் சர்வர் டவுன் ஆகியிருக்கிறது. வாடிக்கையாளர்களின் கவலை எங்களுக்கு புரிகிறது. ஆண்டு இறுதி கணக்கு பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் சர்வர் இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போது இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று விளக்கமளித்திருக்கிறது. எப்போது இந்த சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதுதான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. மருத்துவமனை, உணவு என அடிப்படையான தேவைகளுக்கு கூட பணத்தை பயன்படுத்த முடியாததால் வாடிக்கையாளர்கள் வங்கி மீது கடுமையாக அதிருப்தியடைந்துள்ளனர்.













Click it and Unblock the Notifications