செங்கோட்டையன் பாணியில் களமிறங்கிய சிவி சண்முகம்.. திடீரென எடப்பாடிக்கு எதிராக கொந்தளிப்பது ஏன்?
சென்னை: அதிமுகவில் இருந்த கடைசி சில நாட்களில் செங்கோட்டையன் பேசியதை போலவே தற்போது சிவி சண்முகம் பேசி தொடங்கி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர். அதிமுக ஒரு குடும்ப பிடியில் சிக்கியுள்ளது, எடப்பாடி பழனிசாமி தனது மகனை கட்சிக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார் என்று செங்கோட்டையன் பேசிய கருத்தையே சிவி சண்முகம் பேசி இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரெனப் பற்ற வைத்துள்ள வாரிசு அரசியல் வெடி, ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுன் பழனிசாமியைக் கட்சிக்குள் கொண்டு வர நாடகம் ஆடுவதாகச் சண்முகம் சாடியுள்ளார்.

இந்த அதிரடித் திருப்பம் குறித்து அரசியல் விமர்சகர்கள் ஒரு சுவாரசியமான ஒப்பீட்டை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். அதிமுகவில் இருந்து விலகுவதற்கு முந்தைய கடைசி சில நாட்களில் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் எத்தகைய கருத்துக்களைப் பேசிப் போர்க்கொடி தூக்கினாரோ, அதே பாணியில் தான் தற்போது சி.வி.சண்முகமும் பேசத் தொடங்கியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
"அதிமுக தற்போது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது; எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுன் பழனிசாமியைக் கட்சிக்குள் பின்வாசல் வழியாகக் கொண்டு வரத் தீவிரமாக முயற்சிக்கிறார்" என்று அன்று செங்கோட்டையன் வெடித்தார். தற்போது அதே வார்த்தைகளையும், அதே குற்றச்சாட்டுகளையும் தான் சி.வி.சண்முகமும் கையில் எடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் தனிச்சார்பு முடிவுகளாலும், வாரிசை முன்னிறுத்தும் திட்டத்தாலும் அதிருப்தியின் உச்சத்துக்கே சென்ற சண்முகம், செங்கோட்டையன் பாணியிலேயே இபிஎஸ்-க்கு நேரடி 'செக்' வைத்துள்ளார். அதிமுகவில் ஒரு மூத்த தலைவர் தலைமைக்கு எதிராகப் பகிரங்கமாகத் தனது குரலை உயர்த்துகிறார் என்றாலே, அவர் கட்சியை மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் முடிவிலோ இருக்கிறார் என்பதுதான் அர்த்தம்.
அன்று செங்கோட்டையன் பேசிய அதே ஸ்கிரிப்ட்டை இன்று சண்முகம் பேசுவதைப் பார்த்தால், அவரும் அதிமுகவில் தனது கடைசி நாட்களை நெருங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது" என அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கடந்த 3 வாரங்களாக அமைதியாக இருந்த சிவி சண்முகம் திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெடித்துள்ளார்.
இன்னொரு பக்கம் வன்னியர் சமூக மக்களால் தான் அதிமுக 31 தொகுதிகளில் வென்றது என்ற பகீர் விமர்சனத்தை வைத்துள்ளார். இதனால் சிவி சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஏற்கனவே சிவி சண்முகத்தின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதற்கே சிவி சண்முகம் நேரடியாக எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க தொடங்கிவிட்டார் என்றும் சில பேச்சுகள் எழுந்துள்ளன. சுயேட்சையாக இருக்கும் போது சிவி சண்முகத்தால் எளிதாக தவெகவில் இணைய முடியும் என்றும் தெரிய வந்துள்ளது. இதனால் சிவி சண்முகத்தின் பேட்டிக்கு பின்னணியில் பல்வேறு கணக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications