சென்னையை நெருங்கும் புயல்.. பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்ன? தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னை: மணிக்கு 10 கி.மீ வேகத்தில் புயல் இலங்கையிலிருந்து சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது காவிரி படுகையில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் புயல் சென்னையை நெருங்குவதால், மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் உருவான டிட்வா புயல் தற்போது சென்னையை நோக்கி நகர்ந்து வந்துக்கொண்டிருக்கிறது. முன்னதாக இலங்கையில் கணிசமான அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 60க்கும் மேற்பட்டோர் இந்த பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர்.

ரெட் அலர்ட்
இந்நிலையில் புயல் தமிழக பகுதிகளை தொட்டிருக்கிறது. தற்போது காவிரி படுகையை ஒட்டி நிலை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கப்பட்டதை போலவே கடுமையான மழைப்பொழிவை கொடுத்திருக்கிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் மரங்கள் சாய்ந்திருக்கின்றன.
மாலை 5 மணி நிலவரப்படி சென்னையில் கனமழை தொடங்கியிருக்கிறது. எனவே மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவறுத்தப்பட்டிருக்கின்றனர்.
அறிவுறுத்தல்
புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை மாநகராட்சி பள்ளிகள், சமூக மையங்கள், திருமண மண்டபங்கள் என மொத்தம் 215 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு 111 சமையல் கூடங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. புயல் உருவாக்கும் பலத்த காற்றால் சாயும் மரங்களை அகற்ற 457 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. சோழிங்கநல்லூர், பெருங்குடி, தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் தலா 25 பேர் அடங்கிய மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், மீட்பு பணிகளுக்காக நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்குமாறும், கடற்கரை மற்றும் பூங்காவிற்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை மாநகராட்சி விடுத்துள்ள எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
செல்ஃபி எடுக்க கூடாது
புயல் மழையின் போது, ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், தாழ்வான இடங்களில் வாழும் முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே செல்ல வேண்டும், மரங்கள் மற்றும் சேதமடைந்த கட்டிடங்களுக்கு கீழ் நிற்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல பொதுமக்கள் புகாருக்கும் உதவிக்கும் 1913 என்ற 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புயல் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு மத்திய கட்டுப்பாட்டு அரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் துணை ஆணையர் அலுவலகங்களில் 12 மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகளும், தாழ்வான மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் 49 சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளும் மூத்த அதிகாரிகளின் மேற்பார்வையில் செயல்படுகின்றன.
மீட்பு குழுக்கள்
அதேபோல ஒரு குழுவுக்கு 10 பேர் என்ன 12 சிறப்பு மீட்பு குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு வாகனம், ரப்பர் படகுகள், உயிர் காக்கும் மிதவை சட்டைகள், கயிறுகள் மற்றும் பிற மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் உள்ள அனைவரும் நீச்சல் மற்றும் மீட்பு பயிற்சியை பெற்றவர்கள் ஆவார்கள்.
உடனடி தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்காக சென்னை பெருநகர காவல் துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, பெருநகர போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம், சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகியவை இணைந்து செயல்படுகின்றன.
வெள்ள அபாயம்
புயல் மற்றும் வெள்ள அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து ரோந்து வாகனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் முதலுதவி பெட்டி, கயிறுகள் உள்ளிட்டவை அடங்கி இருக்கின்றன.
பலத்த காற்றின் போது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விளம்பர பலகைகள், பேனர்கள், தகர சீட்டுகள், கட்டுமான பொருட்கள் போன்றவற்றை பாதுகாப்புக்கு வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல சுரங்கப்பாதை மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பழுதான வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த பெருநகர போக்குவரத்து கழகத்திடம் இருந்து 2 பழுது நீக்கும் லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடல் அலைகளின் வேகம் அதிகமாக இருப்பதால் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவசர உதவி தேவைப்பட்டால் பின்வரும் எண்களை தொடர்பு கொள்ளலாம்
- காவல்துறை அவசர எண்: 100 அல்லது 112,
- பெருநகர சென்னை மாநகராட்சி உதவி எண்: 1913
- தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்: 101
என சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications