புரேவி புயல்: தென் தமிழக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அபாயம்- கரைகள், அணைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்
சென்னை: வங்க கடலில் உருவாகும் புரேவி புயலால் தென் தமிழகத்துக்கு அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆறுகளின் கரைகள் மற்றும் அணைகளை தீவிரமாக கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை ஆணையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
வங்க கடலில் புரேவி புயல் இன்று உருவாக உள்ளது. இந்த புயல் நாளை இலங்கையை கடந்து குமரி கடலை நோக்கி நகரக் கூடும். இதனால் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தென் தமிழகம், கேரளாவில் நதிகளின் கரைகளையும் அணைகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய நீர்வளத்துறை ஆணையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை ஆணையம் கூறியுள்ளதாவது:
அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதியின் கரைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகமாக இருக்கக் கூடும் என்பதால் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மேலும் ஏற்கனவே மணிமுத்தாறு அணை 62%; பாபநாசம் அணை 86% நிரம்பியுள்ளது. இதேபோல் கனமழை எச்சரிக்கையால் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் வைப்பாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் நீர்வரத்தை கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீர்வளத்துறை ஆணையம் கூறியுள்ளது. இதேபோல் கேரளாவின் ஆறுகள், அணைகள் தொடர்பாகவும் நீர்வளத்துறை ஆணையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications