உயர் உச்சக் கட்ட தீவிர புயலாக மாறியது ஃபனி.. அடுத்த புயல் எப்போது?
சென்னை: ஃபனி புயல் ஒடிஸா அருகே உயர் உச்சக் கட்ட தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரம் அருகே கரையை கடக்கும் என போக்கு காட்டி வந்தது ஃபனி புயல். இதனால் தமிழகத்தில் மழை இல்லாத நிலை ஏற்பட்டு வெப்பம் நிலவி வருகிறது.

ஃபனி புயல்
இந்த புயலின் தன்மை மற்றும் செயல்பாடுகள் குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஃபனி புயல் சென்னையிலிருந்து வடகிழக்கே 470 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

முன்னெச்சரிக்கை
இது பயங்கர புயலாக மாறியது. இது நாளை மறுநாள் பூரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர். இதன் காரணமாக தமிழகம், ஆந்திர உள்ளிட்ட கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விதிகள் தளர்வு
இந்த நிலையில் ஒடிஸா மாநிலத்துக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் பூரி, ஜகத்சிங்பூர், கேந்திராபாரா, பாத்ராக், பாலாசோர், மாயூர்பாஞ், கஜபதி, கஞ்சம், கோர்தா, கட்டாக் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காரணமாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எச்சரிக்கை
பூரியிலிருந்து சுற்றுலா பயணிகள் நாளை மாலைக்குள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மே 3, 4 ஆகிய தேதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications