கஜா வர்றாண்டா.. 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?
Recommended Video
சென்னை: கஜா புயல் நாளை மாலை கரையை கடக்க உள்ள நிலையில், தஞ்சை, கடலூர் உட்பட 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் நாளை மாலை கடலூர் மற்றும் பாம்பன் நடுவே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மீட்பு பணி
கடலூர் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் உயர் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாகையில் விடுமுறை
இதனிடையே, நாகை மாவட்டத்தில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தமிழகம், புதுச்சேரி
இதன்பிறகு, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்திலும், புதுச்சேரி மாவட்டத்திலும் நாளை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எப்படி?
கஜா புயலின் தாக்கம் மற்றும் மழை காரணமாக சுமார் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எனவே படிப்படியாக மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு இன்று வெளியாகும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் சென்னையும் இடம் பிடிக்குமா என்பது இதுவரை தெரியவில்லை.