பாஜக ஆட்சியை கவிழ்த்த அதே அதிமுக உடன் மீண்டும் கூட்டணி வைத்தது ஏன் - காசி முத்து மாணிக்கம்
தேசத்திற்காக இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி மரணமடைந்த பின்பு இன்று அவர்களின் வாரிசை ஆதரிக்கிறோம் திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை: வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த அதிமுக உடன் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்தது ஏன் என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. தேசத்திற்காக இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி மரணமடைந்த பின்பு இன்று அவர்களின் வாரிசை ஆதரிக்கிறோம் என்று கூறியுள்ள திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், ஜனநாயகத்தைப் பற்றி பாஜக பேசுவது வேடிக்கையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 25ஆம் தேதி பாஜக தொண்டர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது அவர் எமர்ஜென்சி காலம் பற்றியும் அப்போது நடந்த சம்பவங்களையும் நினைவு கூர்ந்தார். அவரது பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக இன்று திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நிர்மலா சிதாராமன் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுத்திருக்கிறார்.

காசிமுத்து மாணிக்கம் அறிக்கை:
பாரத நாட்டின் நிதி அமைச்சர் எங்கள் பெருமைக்குரிய மண்ணின் மகள் தமிழச்சி நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசியுள்ளார். அதில் அவர் கொரோனா ஒழிப்பிற்கான ஒத்துழைப்பையோ, சீனாவின் எல்லை ஆசை வெறியையோ எடுத்துச் சொன்னால் பரவாயில்லை. ஆனால் 45 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க. ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் இணைந்து தி.மு.க. ஜனநாயகம் பேசுவது வியப்பாக உள்ளது என்கிறார். எமர்ஜென்சி கொண்டு வந்து பல தலைவர்களை சிறையில் அடைத்த காங்கிரஸ் என்றும் பொங்கி உள்ளார்.
செட்டி கெட்டால் பட்டு வேட்டி என்பது போல பேச ஒன்றும் கிடைக்காமல் பழைய, பழைய நிகழ்வை நினைவூட்டுகிறார். ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அந்த நிகழ்வுக்காக அன்னை இந்திரா மன்னிப்பு கேட்ட பிறகுதான் இணைந்தோம். ஆனால் 1998ல் கூட்டணியாக போட்டியிட்ட அதிமுக நீண்ட இழுப்புக்கு பின், மதிமுக, பாமக ஆதரவு கடிதம் கொடுத்த பிறகுதானே, கடிதம் தந்தது, அதுகூட பரவாயில்லை. 13 மாதத்திலேயே பாஜக ஆட்சியை ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோற்கடித்ததே.
இரும்பு மனிதர் அத்வானிஜியை செலக்டிவ் அம்னீஷியா உள்ளவர் என்று ஜெயலலிதா கூறினாரே. அதன்பின் எந்தக் கட்டத்திலாவது தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டதா அதிமுக. மன்னிப்பு கேட்காத சூழலில் எந்த அதிமுக வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்ததோ அதே அதிமுகவுடன் வாஜ்பாய்யே 2004ல் கூட்டணி வைத்தது ஏன்?
ஆனால் திமுக, அன்னை இந்திராவின் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்ல, தேசத்திற்காக அன்னை இந்திரா - தியாகி இராஜீவ்காந்தியின் மரணத்திற்குப் பின் இன்று அவர்களின் வாரிசை ஆதரிக்கிறோம். ஒன்றிரெண்டு பெற்றால்கூட ஆட்சி என அலையும் பாஜக, மாற்று கட்சி உறுப்பினரை தாவ வைத்து, ராஜினாமா செய்யச் செய்து ஆட்சியையும், ராஜ்யசாப உறுப்பினர்களையும் பெற்றிடும் பாஜக ஜனநாயகத்தை பேசுகிறது.
காஷ்மீரில் பரூக் அப்துல்லா போன்ற சிங்கங்களை கூண்டில் வைப்பதுபோல வீட்டில் சிறை வைத்து கொடுமை செய்து வரும் பாஜக ஜனநாயகம் பேசுகிறது. வாஜ்பாய், அத்வானியை அவமானப்படுத்திய அதிமுக ஆட்சியினை காப்பாற்ற, செல்லாத நோட்டை எல்லாம் குழுவில் சேர்த்து மோசடிக்கு உடந்தை போடும் பாஜக ஜனநாயக நேர்மை பேசலாமா?
சித்தாந்தம் பேசுவதெல்லாம் எதிர்கட்சிகளுக்குதான் உங்களுக்கு இல்லை. அம்மா, உங்களுக்கு தெரியுமா? காவி - சிவப்புடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது தெரியுமா? மெகபூபாவின் முஸ்லீம் லீக்குடன் பாஜக சேர்ந்து காஷ்மீரில் ஆட்சி அமைத்தது தெரியுமா? பாலை காப்பதற்கு யாரை காவல் வைக்கலாம் என பால்காரனுக்கு தெரியும் பூனை ஆலோசனை கூற வேண்டாம். எங்களை வழி நடத்திட, வாழ்வு தந்திட எங்கள் இளைய கலைஞர் தலைவர் தளபதிக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications