தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்.. 59 ஆண்டுகள் முன் அண்ணா ஆட்சிக்கு வந்த வரலாறு
சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி இந்திய வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி, 59 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் அரியணையில் ஏறியது. முதலமைச்சராக அறிஞர் அண்ணா பதவி ஏற்ற தினம் இன்று.
சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியே மத்தியிலும், அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செய்து வந்த நிலையில் முதல் முறையாக மாநிலக் கட்சியான திமுக 1967 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் தேதி தமிழ்நாட்டில் வென்று ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக அறிஞர் அண்ணா பதவியேற்றார்.

1965 ஆம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து கடும் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதை கண்டு தமிழ்நாட்டோர் கொதித்தனர். மேலும், இந்தி திணிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை தமிழ்நாட்டு மக்களைப் பாதித்தது.
இதன் விளைவாக 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 1967-ம் ஆண்டு 4-வது பொதுத்தேர்தலில் திமுக தலைமையில் ராஜாஜியின் சுதந்திராக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்டவை இணைந்து போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.
திமுக கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற்றது. 179 இடங்களில் வென்ற கூட்டணியில் திமுக மட்டுமே 137 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி 232 இடங்களில் போட்டியிட்டு 51 இடங்களை மட்டுமே பெற்று 88 இடங்களை இழந்தது. அண்ணா முதல்வர் ஆனார். ஆனால், அந்தத் தேர்தலில் அண்ணா சட்டப்பேரவைக்குப் போட்டியிடவில்லை. மக்களவைக்குப் போட்டியிட்டு தென்சென்னை எம்.பி. ஆனார். அதற்குப் பிறகு எம்.பி.பதவியை ராஜினாமா செய்து சட்ட மேலவைக்குள் நுழைந்ததன் மூலம் முதல்வர் ஆனார்.
இந்தியப் பொதுத் தேர்தல் வரலாற்றில், முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த அரிய சாதனையைப் படைத்த நாள் இன்று. திமுகவின் சார்பில் 1967ஆம் ஆண்டு அண்ணா முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். தமிழில் பதவியேற்பு நிகழ்வினை நடத்தி, உளமார உறுதிமொழி கூறிப் பொறுப்பேற்ற நாள் இன்று. சுமார் 23 மாதங்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த அண்ணா 1969-ல் மறைந்த பிறகு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதல்வரானார்.
பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது, புரோகிதர்கள் இல்லாமல் நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சிக்கன நடவடிக்கையாக அமைச்சர்களின் ஊதியம் பாதியாக குறைக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் உள்ள தமது எளிமையான வீட்டிலேயே வாழ்ந்தார் பேரறிஞர் அண்ணா.
இதையொட்டி, தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கமான எக்ஸ் தளத்தில், அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்' என்று புகழாரம் சூட்டி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான #StalinStatement-ஐ அறிவிக்க இருக்கிறேன்! திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்... உங்கள் அனைவரின் ஆதரவோடும்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications