அம்மா எங்களுக்கு மம்மி.. மோடி எங்களுக்கு டாடி என்கிறார் அமைச்சர்.. தயாநிதி மாறன் பேச்சு
சென்னை: தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பிரச்சாரங்கள், பதிலடி பிரச்சாரங்கள் என்று அனல் பறக்கிறது அரசியல் களம்.
Recommended Video
கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து, குறிச்சி பிரிவு இட்டேரி பகுதியில் தயாநிதி மாறன் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது தயாநிதி மாறன் மத்தியில் மற்றும் மாநில ஆளும் கட்சிகளை, விமர்சனம் செய்து பேசினார்.

பாச உறவு
வெறுப்பு அரசியல் செய்து இந்துக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக நினைப்பதாக அவர் குறிப்பிட்டார். அதே நேரம் தமிழகத்தில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் இடையேயான பாச உறவை என்றும் பிரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

குடியுரிமை சட்ட திருத்தம்
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது அதிமுக என்று குற்றம்சாட்டினார் தயாநிதி மாறன். ஆனால், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்போம் என முதல்வர் பழனிசாமி சொல்கிறார். அதிமுக இரட்டை நிலைப்பாட்டுக்கு இது ஒரு உதாரணம்.

நீட் தேர்வு
சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்த அதிமுக, தற்போது தேர்தலுக்காக பொய் சொல்கிறது. ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு பறிக்கிறது. இதை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்பிறகு, தமிழகத்தில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நர்சிங் மற்றும், கலை, அறிவியல் கல்லூரியில் சேரவும் தகுதித் தேர்வு அவசியம் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

டாடி
தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டுமானால், மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். "அம்மா" எங்களுக்கு மம்மி, மோடி எங்கள் டாடி என்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதை நாம் சொன்னால் கத்துவார்கள். இவ்வாறு தயாநிதிமாறன் பேசினார்.












Click it and Unblock the Notifications