அகவிலைப்படி 2% உயர்வு.. தமிழக அரசு ஊழியர்களுக்கு வந்த அரசாணை.. 1 ரூபாய், 50 காசு.. செம மகிழ்ச்சி
சென்னை: அரசு ஊழியர்களுக்கு 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக அகவிலைப்படியை 01-01-2025 முதல் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்ததன் அடிப்படையில், அகவிலைப்படியினை 2 சதவீதம் கூடுதல் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட அகவிலைப்படியினைக் கணக்கிடுகையில் ஒரு ரூபாய்க்குக் குறைவாக வரக்கூடிய தொகை, அது 50 காசும் அதற்கு மேலும் இருக்குமாயின் அது அடுத்த ஒரு ரூபாயாகக் கணக்கிடப்பட வேண்டும். அதுவே. 50 காசுக்குக் குறைவாக இருந்தால் அது விட்டுவிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2 நாட்களுக்கு முன்பு, அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் 9 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.. குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு 1.1.2025 அன்று தேதிப்படி அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும். 1.10.2025 முதல் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறலாம் என்பது உள்பட 9 அறிவிப்புகளை சட்டப்பேரவை விதி 110ன் கீழ் அறிவித்திருந்தார்.

இரண்டாவது அறிவிப்பு
அதில் இரண்டாவது அறிவிப்பாக, "01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை மத்திய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் .
இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும்" என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.
அகவிலைப்படி உயர்வு
மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்பின்படி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 2025 முதல் ஏப்ரல் 2025 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையினை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லாப் பரிவர்த்தனை முறை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும்.
திருத்தப்பட்ட அகவிலைப்படி
திருத்தப்பட்ட அகவிலைப்படியினைக் கணக்கிடுகையில் ஒரு ரூபாய்க்குக் குறைவாக வரக்கூடிய தொகை, அது 50 காசும் அதற்கு மேலும் இருக்குமாயின் அது அடுத்த ஒரு ரூபாயாகக் கணக்கிடப்பட வேண்டும். அதுவே. 50 காசுக்குக் குறைவாக இருந்தால் அது விட்டுவிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள்,உடற்பயிற்சி இயக்குநர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும் பொருந்தும்.
ஊராட்சி செயலாளர்கள்
மேலும் ஊதிய அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய்த் துறையிலுள்ள கிராம உதவியாளர்களுக்கும். சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சிச் செயலாளர்கள் /எழுத்தர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களுக்கும் பொருந்தும்.
திருத்தப்பட்ட அகவிலைப்படி தற்போது அகவிலைப்படி பெறும் முழு நேரப் பணியாளர்களுக்கும், சில்லறைச் செலவு நிதியிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர அலுவலர்களுக்கும் அனுமதிக்கத்தக்க வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படி, பகுதி நேரப் பணியாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications