திருமாவளவனை "போட்டு தள்ளுவோம்"... மிரட்டல் விடுத்த ஸ்ரீதர்.. தட்டித் தூக்கிய போலீஸ்!
திருமாவளவனுக்கு மிரட்டல் விடுத்த ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை: "திருமாவளவனை போட்டுட்டுதான் ஒதுங்குவோமே தவிர.. பார்த்துட்டு ஒதுங்கமாட்டோம்" என்று மிரட்டல் விடுத்தாரே ஸ்ரீதர், அவர் மீது இப்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் தலைவர் ஸ்ரீதர்.. சென்னை நங்கநல்லூரில் ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் 2 தினங்களுக்கு முன்பு பேசினார்..
அப்போது, "திருமாவளவனுக்கு என்ன 7 கொம்பா முளைச்சிருக்கு? நீ எந்த சாதியா இருந்தால் என்ன? நீ ஹிந்துவே இல்லை.. நான் கிறிஸ்டியன்னு நீ பேட்டி தர்றே.. எந்த அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியில் நின்னு நீ ஜெயிக்க முடியும்? துணிச்சல் இருந்தால், நீ ஆம்பிளையா இருந்தால், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வா பார்க்கலாம்..
2 ஆயிரம் ஓட்டுலதானே ஜெயிச்சிருக்கே.. ஒரு வார்டு கவுன்சிலரே 9 ஆயிரம் 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்கிறான்.. பூராம் இந்துக்கள் ஓட்டு.. சிதம்பரம் தீட்சிதர் 28 ஆயிரம் பேர் ஓட்டு போட்டிருக்கான்.. ஓட்டு மட்டும் பாப்பான் ஓட்டு இனிக்குதோ? இப்போ மனு தர்மம்? யார் மனு? திருமாவளவன் மீது கேஸ் தந்தேன்.. யாருமே கைது பண்ணல.. ஆனால் முருகனை மட்டும் கைது பண்றீங்களே?" என்று விசிக தலைவர் திருமாவளவன் குறித்து ஆபாசமாகவும், அருவெறுக்கத்தக்க வகையிலும், மிரட்டல் விடுத்தும் பேசியிருந்தார்.
ஸ்ரீதரின் இந்த பேச்சு சோஷியல் மீடியாவில் படுவைரலானது.. விசிகவினர் இதை பார்த்து கொந்தளித்துவிட்டனர்.. திருமாவளவன் மட்டுமல்லாமல், திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும், மாவோ, ஏங்கல்ஸ், லெனின் போன்ற கம்யூனிச தலைவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக ஸ்ரீதர் பேசியிருந்தார்.
இதில், திருமாவை பேசியது கடுமையான சர்ச்சைக்குள்ளாகவும், விசிக கோவை தெற்கு மாவட்ட தலைவர் பிரபு பொள்ளாச்சி ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின் அடிப்படையில், பொள்ளாச்சி போலீசார் ஸ்ரீதர் மீது கொலை மிரட்டல், அவமதித்தல், ஆபாசமாகப் பேசுதல், கலகம் செய்தல் உட்பட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.