தமிழ்நாடு சட்டசபை கூட்டம்.. இன்றும் தொடரும் பட்ஜெட் மீதான விவாதம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடர உள்ளது. இன்றும், திங்கட்கிழமையும் பட்ஜெட் மீதான விவாதம் நடக்க உள்ள நிலையில், மார்ச் 28ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கடந்த 20ம் தேதி கூடியது. அன்றைய தினம் 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதையடுத்து 21ஆம் தேதி 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டசபை கூட்டத்தொடர்
மார்ச் 22ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால் சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று மீண்டும் கூடியது. நேற்று முதல் வரும் 28ஆம் தேதி வரை 4 நாட்கள் பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெறுகிறது. இதனிடையே நேற்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பட்ஜெட் மீதான விவாதம்
இதனைத் தொடர்ந்து இன்றும் சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. இன்று, வரும் திங்கள் கிழமையும் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. பின்னர் 28ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச உள்ளார்.

மானியக் கோரிக்கை தொடக்கம் எப்போது?
மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்தை தொடர்ந்து மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் 29ஆம் தேதி முதல் தொடங்கி, ஏப்ரல் 21ஆம்தேதி வரை நடக்க இருக்கிறது. மார்ச் 29ஆம் தேதி மானியக் கோரிக்கையாக நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை காலையிலும், போக்குவரத்து துறை மாலையிலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அப்பாவு முக்கிய அறிவிப்பு
இதனிடையே தமிழக சட்டசபையில் ஏப்ரல் 6ஆம் தேதி காலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அது ஏப்ரல் 10ம் தேதி காலைக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஏப்ரல் 10ம் தேதி காலையில் நடைபெற இருந்த தொழில்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம், ஏப்ரல் 6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications