பெரியார் நினைவு நாள் பதிவுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்ட தமிழ்நாடு சீமான், கர்நாடகா டிகே சிவகுமார்!
சென்னை: தந்தை பெரியார் 50-வது நினைவு தினத்தை முன்னிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோர் மிக கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் எதிர்கொண்டனர்.
தமிழ்நாட்டின் 'தந்தை'யாக போற்றப்படுகிறவர் பெரியார். தந்தை பெரியார் என்ற பெயரை உச்சரிப்பதே இன்றும் 'ஆதிக்கம் செலுத்தும்' சக்திகளுக்கு ஒவ்வாமையாக இருந்து வருகிறது. தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலும் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டார். அவர் மறைந்து அரை நூற்றாண்டு ஆன போதும் கடும் எதிர்ப்புகளை சந்திக்கிறார். தந்தை பெரியார் மறைந்த போதும் அவரது சித்தாந்தங்கள் இன்னமும் வீச்சாகவும் பேசு பொருளாகவும் விவாதப் பொருளாகவும் இருந்து வருகிறது.

தந்தை பெரியாரின் 50-வது நினைவு நாள் டிசம்பர் 24. இதனை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது எக்ஸ் பக்கத்தில், மானமும், அறிவும் மனிதருக்கு அழகு என்று போதித்த பெருந்தகை! பெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு இந்தக் களங்களில் சற்றும் சமரசமின்றிப் போராடிய போற்றுதற்குரிய வழிகாட்டி ஐயா பெரியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம் என பதிவிட்டிருந்தார். நாம் தமிழர் கட்சியின் மேடைகளில் பெரியார் புரட்சியாளரே அல்ல என பேசி வரும் சீமான், பெரியார் நினைவு நாளை முன்னிட்டு பதிவிட்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சியினரோ மிக கடுமையாக இந்த பதிவுக்காக அவரை விமர்சித்திருந்தனர். இந்த ஒரு பதிவுக்காக மட்டும் உங்களை திட்டுகிறோம் என தொடங்கி மிக மிக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி சீமானுக்கு எதிராக பதிவிட்டிருந்தனர் நாம் தமிழர் தம்பிகள்.

இதேபோல கர்நாடகா மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமாரும் தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு தமது எக்ஸ் பக்கத்தில் கன்னட மொழியில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பாஜகவினர் கடுமையாக கண்டித்திருந்தனர். மேலும் மடாதிபதிகளுடன் டிகே சிவகுமார் இருக்கும் படங்களையும் பகிர்ந்து அவரை விமர்சித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications