ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை? “முடிவு விரைவில் அறிவிக்கப்படும்” திருமாவளவன் பரபர பேட்டி!
சென்னை: ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று பதில் அளித்துள்ளார். ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் விரைவில் முடிவை அறிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசிய பிறகு, விஜய்யுடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என திருமாவளவன் அறிவித்தார்.

அம்பேத்கர் புத்தக வெளியீடு: இந்நிலையில் அந்தப் புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விசிக துணைப் பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ஆதவ் அர்ஜூனா ஏற்பாட்டில் நடந்த விழாவில் விஜய் கலந்து கொண்டார்.
விஜய் பேச்சு: இதில் பேசிய விஜய், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க விடாமல் திருமாவளவனுக்கு கூட்டணி அழுத்தம் தரப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். விஜய்யின் கருத்துக்கு பதில் அளித்த விசிக தலைவர் திருமாவளவன், விஜய்யின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை, எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்றார்.
திருமாவளவன் பங்கேற்கவில்லை: தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை குறி வைத்து குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியல் ஆக்கி விடுவார்கள் என்பதால் தான், நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை. இதுபற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நான் முன்கூட்டியே கூறிவிட்டேன். இதுநான் சுதந்திரமாக எடுத்த முடிவு என திருமாவளவன் தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜுனா சர்ச்சை பேச்சு: மேலும், அந்த புத்தக வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதை போல, பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது. இனி தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும். தமிழகத்தில் இனி மன்னராட்சிக்கு ஒருபோதும் இடம் இல்லை" என்று பேசினார் ஆதவ் அர்ஜுனா.
திமுக பற்றி, விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை விசிக தலைவர்கள் கண்டித்துள்ளனர். திருமாவளவனும், ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு 100 விழுக்காடு தவறானது என்றும், ஆனால் அவர் மீதான நடவடிக்கை பற்றி கட்சி நிர்வாகிகளிடம் மேலும் ஆலோசனை மேற்கொண்டு தகவல் தெரிவிக்கப்படும்'' என்றும் தெரிவித்திருந்தார்.
திருமாவளவன் பேட்டி: இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் விசிக தலைவர் திருமாவளவன். அப்போது பேசிய அவர், "விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. புதியதாக அமையும் கூட்டணியில் விசிக இடம் பெறாது; புதிய கூட்டணியில் இடம் பெற வேண்டிய தேவையும் எழவில்லை. விசிக குறி வைக்கப்படுகிறது என்பதைவிட திமுக கூட்டணி குறிவைக்கப்படுகிறது.
திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கக்கூடாது, அதனை சிதறடிக்க வேண்டும் என்பது அனைத்து எதிர்க்கட்சிகளின் செயல் திட்டமாக உள்ளது. தொடர் வெற்றியை பெற்று வரும் திமுக கூட்டணி 2026 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடக் கூடாது, அதன் கட்டுக்கோப்பை சீர்குலைக்க வேண்டும் என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நினைக்கின்றன. அதற்கு விசிகவை ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என நினைக்கின்றனர். அதற்கு வாய்ப்பில்லை.
சூதாட்டம் ஆட விரும்புகிறவர்கள் தமிழக அரசியல் களத்தில் கலவரத்தை உருவாக்குவார்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும். முயற்சிக்கவில்லை அதற்கான சூழல் இல்லை.
ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை?: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச் செயலாளர் 10 பேர் உள்ளனர். அதில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சியின் நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை கட்சியின் முன்னனி தோழர்கள் உணர்ந்துள்ளனர். அதனை கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அதுகுறித்து நிர்வாகிகளுடன் பேசியுள்ளேன்.
விசிக துணை பொதுச் செயலாளர்கள் நிலை வரையிலானவர்கள் மீதான புகார்களில் கட்சியின் உயர்நிலைக் குழு கூடி முடிவு செய்யும். குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பதை உறுதிப் படுத்தியபிறகே நடவடிக்கை என்பது என்பது எங்கள் நடைமுறையாக உள்ளது.
தலித் அல்லாத ஜனநாயக சக்திகள் கட்சியில் அதிகார மையத்தில் வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம். கட்சியில் தலித் அல்லாதவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது எங்களின் கடமை. அதன்படி, ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் விரைவில் உயர்நிலைக் குழு கூடி ஆலோசித்து அது தொடர்பான முடிவை விரைவில் அறிவிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications