நெருங்குது தீபாவளி.. திக்கு முக்காடிய சென்னை தி நகர்.. திரும்பிய இடமெல்லாம் கூட்டம்! குவிந்த மக்கள்
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால், சென்னை தி நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட முக்கிய வணிக பகுதிகளில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாடைகள் வாங்குவதற்காக மக்கள் குவிந்ததால் சென்னை மட்டும் இன்றி தமிழ்நாடு முழுக்க முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மக்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் தயாரித்து புத்தாடை அணிந்து உற்சாகமாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள், பண்டிகை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.

தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால், பண்டிகைக்காக புத்தாடைகள் வாங்க வணிக வீதிகளில் மக்கள் இன்று குவிந்தனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை நாள் என்பதால் சென்னை தி நகரில் ரங்கநாதன் தெருவில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
மின்சார ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ரங்கநாதன் தெருவில் நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குடும்பத்துடன் வருகை தந்த மக்கள், தங்களுக்கு தேவையான ஆடை, அணிகலன்களை வாங்கி சென்றனர்.
அடுத்த 1 மணி நேரம்.. சென்னை உள்பட 29 மாவட்டங்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்".. வெளுக்க போகுது கனமழை!
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக கடைகளிலும் பல்வேறு ஏற்பாடுகளை வணிக நிறுவனங்கள் செய்து இருந்தன. இன்று சென்னையில் வெயிலின் தாக்கமும் குறைவாக இருந்தததால் மதியத்திற்கு மேல் கூட்டம் அலைமோதியது. தி நகர், புரசைவாக்கம் போன்ற இடங்களில் எங்கு பார்த்தாலும் கைகளில் பையுடன் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். சாலையோர கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் மக்கள் கவனமாக இருக்குமாறு விழிப்புணர்வையும் போலீசார் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தனர். சென்னை மட்டும் இன்றி கோவை, மதுரை போன்ற நகரங்களிலும் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஷாப்பிங் செய்ய வரும் மக்கள் கூட்டம் இன்னும் அதிமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளிலும் விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications