கைகொடுத்த மாஸ்டர் பிளான்.. வண்டலூரில் முதல்முறை இப்படி.. முதல்வரின் திட்டத்தால் அசந்து போன மக்கள்!
சென்னை: சென்னையின் எல்லையில் எப்போதும் காணப்படும் கடுமையான தீபாவளி போக்குவரத்து நெரிசல்.. தமிழக முதல்வர் பழனிச்சாமி எடுத்த நடவடிக்கையால் நேற்று பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது.
தீபாவளிக்கு முன் மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால்.. சென்னையின் எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். கோயம்பேட்டில் இரவு பத்து மணிக்கு பேருந்து ஏறினால் செங்கல்பட்டை தாண்டுவதற்குள் அதிகாலை ஆகிவிடும்.
அந்த அளவிற்கு சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். முக்கியமாக பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் தீவிரமான போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
போக்குவரத்து நெரிசல்
சென்னையில் எப்போதும் இப்படி காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு வண்டலூர் மேம்பாலம் தீர்வாக அமைந்துள்ளது. ஆம்.. நேற்று சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டாலும் கூட.. வண்டலூர் பகுதியில் மட்டும் கொஞ்சம் கூட போக்குவரத்து நெரிசல் காணப்படவில்லை. ஒரு காலத்தில் பெருங்களத்தூரில் இருந்து வண்டலூரை கடந்து செல்வது சிரமம் என்று இருந்த நிலை இப்போது மாறியுள்ளது.
பாலம்
தற்போது வண்டலூரில் இருக்கும் அண்ணா உயிரியல் பூங்கா அருகில் உள்ள மாம்பாக்கம் சந்திப்பில் 55 கோடி ரூபாயில் புதிய உயர்நிலை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 17ம் தேதி இந்த பாலம் திறக்கப்பட்டது. முதல்வர் பழனிசாமி திறந்து வைத்த இந்த பாலம் 711 மீ. நீளம், 24 மீ. அகலம் கொண்ட பாலம் ஆகும். அதேபோல் இது 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலம் ஆகும்.
முதல்முறை
தமிழகத்தில் முதல்முறை இப்படி ஒரு உயர்நிலை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு 2014 அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். அதிலும் மிக சரியான திட்டமிடலுடன்.. சரியான இடத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
குறைந்தது
தற்போது இந்த பாலம் காரணமாக சென்னையில் வண்டலூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் குறைந்துள்ளது. மொத்தமாக வண்டலூர் பகுதியில் கொஞ்சம் கூட போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் எளிதாக இங்கே பயணித்ததை பார்த்து மக்களே ஆடிப்போய் உள்ளனர்.
வண்டலூர்
பெங்களூர், மும்பையை போல சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க காரணம்.. சென்னையில் இருக்கும் மேம்பாலங்கள்தான். சென்னையில் வண்டலூர், பெருங்களத்தூரில் மட்டும் பண்டிகை நாட்களில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும். தற்போது அந்த நெரிசலும் கூட.. முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்த உயர்நிலை மேம்பாலம் காரணமாக குறைந்துள்ளது!