இரட்டை இலை சின்னம் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன? புகழேந்திக்கு அதிரடி உத்தரவு
சென்னை: இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவின் கொடி தொடர்பாக தரப்பட்டுள்ள புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்குமாறு கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடர்பாக தோ்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அளித்துள்ள புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போத, புகழேந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், '2017-ஆம் ஆண்டு முதல் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுக கட்சியின் பெயா் மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. தேர்தலுக்கான வேட்பாளர் மனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தனித் தனி புகார் மனுக்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருக்கிறோம்.
ஆனால், தேர்தல் ஆணையம் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று புகழேந்தி சார்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுகிட்ட நீதிபதி, தற்போது அதிமுக இரண்டு அணிகளாக உள்ளதா என்றும் அதனால்தான் இரு தரப்பும் அதிமுகவுக்கு உரிமை கோருகின்றனவா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சாா்பில் ஆஜரான வழக்கறிஞரர் பாலாஜி சீனிவாசன், 'அதிமுக என்பது ஒரே அணியாகத்தான் உள்ளது. யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவா்களுக்கே கட்சியும், சின்னமும் கொடுக்கப்படும். இந்த விவகாரத்தில் பெரும்பான்மை அடிப்படையில் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே எங்களை அங்கீரித்துள்ளது. மேலும், புகழேந்தி அதிமுகவில் ஒரு அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். எனவே, அவருக்கு எந்த உரிமையும் இல்லை.
அதிமுகவை பொறுத்தவரை அதன் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தோ்ந்தெடுத்துள்ளது. கட்சியின் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களும் எடப்பாடி பழனிசாமியின் பக்கமே இருக்கிறார்கள் எனவே, இந்த விவகாரத்தில் புகழேந்தி தலையிட எந்த உரிமையும் இல்லை’ என எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா இன்று தீர்ப்பளிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் புகார் அளிக்குமாறு புகழேந்திக்கு அறிவுறுத்தினார். மேலும் அந்த மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, புகழேந்தியின் வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications