உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? தமிழக காங்கிரஸ் மீது பாய்ந்த டெல்லி தலைகள்.. மோசமாகிடுச்சே!
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இரண்டு வாரத்துக்கு முன்பு கோவைக்கு வந்திருந்தார். வந்த வேலை முடிந்ததும் டெல்லிக்கு திரும்ப கோவை ஏர்போர்ட்டுக்கு வந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் கேசி.வேணுகோபாலின் சிஸ்யரும் காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான கோவை மயூரா ஜெயக்குமார் கோஷ்டிக்கும், கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளரான கோவை செல்வம் கோஷ்டிக்கும் ஏற்பட்ட மோதல் பரபரப்பானது.
இதில், காங்கிரஸ் மகளிர் அணியினரை கொச்சையாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது, அடிக்கப் பாய்ந்தது என மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷ்னர் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியது. தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு கோஷ்டியும், ஐஎன்டியூசி தலைவர் கோவை செல்வன் தரப்பில் ஒரு கோஷ்டியும் மோதியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் இந்த உட்கட்சி மோதல் தேசிய அளவில் வெடித்தது. முக்கியமாக காங்கிரஸ் மகளிர் அணியினரை கொச்சையாக பேசியது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. முதலில் மோதல் வாக்கு வாதமாகவே தொடங்கியது. ஆனால் போக போக வாக்குவாதம் முற்றி நிலைமை மோசமானது. கடைசியில் இரண்டு தரப்பிலும் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்குவதற்கு முயற்சித்தனர்.
இந்த நிலையில், மயூரா ஜெயக்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை கண்டறிய காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் கொண்ட குழுவினை சமீபத்தில் அமைத்தார் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை. இந்த குழு தீவிரமாக விசாரணையும் நடத்தி இருக்கிறது.
இந்த குழுவில், ஜோதிமணி, சுதா, சசிகாந்த் செந்தில், கோபிநாத், ராபர்ட் புரூஸ் ஆகிய 5 எம்.பி.க்கள் உள்ளனர். எம்.பி.க்கள் அடங்கிய இந்த உண்மை அறியும் குழு, கடந்த 30-ந்தேதி சென்னை சத்தியமூர்த்திபவனில் கூடியது. அதன்படி கோவையிலிருந்து 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் சத்தியமூர்த்திபவனுக்கு திரண்டு வந்து, ஏர்போர்ட்டில் என்ன நடந்தது என்பதை விவரித்தனர்.
விசாரணை: இதில் பாதிக்கப்பட்ட பெண்களும் அடக்கம். அவர்களில் பெரும்பாலானோர் மயூரா ஜெயக் குமாருக்கு எதிராக, தங்களுக்கு ஏற்பட்ட மிரட்டலை வாக்குமூலமாகத் தந்துள்ளனர். அதேபோல, மயூரா ஜெயக்குமாரின் ஆதரவாளர்களோ, ''அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருக்கும் மயூரா ஜெயக்குமார் மீதான புகார்களை விசாரிக்க உங்களுக்கு (எம்.பி.க்கள் குழு) அதிகாரம் கிடையாது. அப்புறம் எதற்கு, இந்த விசாரணை? மயூரா ஜெயக்குமார் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் ஒரு குழுவை அமைத்திருக்கிறார் செல்வப் பெருந்தகை.
அதனால், இப்படி ஒரு குழு அமைத்து விசாரிப்பது தவறு'' என்று குழு மீதே புகார் வாசித்துள்ளனர். இதனால், சத்தியமூர்த்திபவனில் ஏக ரகளை நடந்திருக்கிறது. இந்த நிலையில், கோவை காங்கிரசாரிடம் பெயரளவிற்கு விசாரித்து விட்டு அவர்களை அனுப்பி வைத்துள்ளனர் குழுவினர். இப்படிப்பட்ட சூழலில், தனது சிஸ்யர் மயூராவுக்கு எதிராக இப்படி ஒரு குழு அமைக்கப்பட்டதை அறிந்த கே.சி.வேணுகோபால், ''ஏ.ஐ.சி.சி. மெம்பரை விசாரிக்க உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது?'' என்று செல்வப்பெருந்தகையிடம் கோபம் காட்டியுள்ளார். இதனையும் மீறி உண்மை அறியும் குழுவினர் விசாரணை நடத்தியிருப்பதால், செல்வப்பெருந்தகை மீதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதும் அதிருப்தியடைந்திருக்கிறாராம் கே.சி.வேணுகோபால்.












Click it and Unblock the Notifications