தொகுதி மறுசீரமைப்பு வெறும் நாடகம்.. தமிழக உரிமைகளை கோட்டைவிட்ட முதல்வர் - அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளான தண்ணீர் முதல் எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு காணாமல் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தின் உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் கோட்டை விட்டிருக்கிறார். இன்று நடத்தப்படும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் என்பது வெறும் நாடகம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து, சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக் கொடியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக தேர்தல் அறிக்கை எண் 84 இல் ஆட்சிக்கு வந்தவுடன் செண்பக அணையை சரிசெய்து விடுவோம் என்று கூறியிருந்தனர். ஆனால் அணையில் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாததால் தென்காசி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
திருவனந்தபுரத்தில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகள், குப்பைகளை தமிழகத்திற்குள் கொட்டத் தொடங்கியுள்ளனர். கேரளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி வந்ததற்குப் பின்னர் தென்காசி, கோவை உள்ளிட்ட கேரளத்தை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் மருத்துவக் கழிவு, மனிதக் கழிவு, மிருகக் கழிவுகள் என அனைத்தும் கொட்டப்பட்டு வருகின்றன.
கர்நாடகத்தைப் பொருத்தவரை நீண்டகாலமாக இருக்கக்கூடியது காவிரி பிரச்சனை. குறிப்பாக இன்று மேகதாது அணையை கட்டியே தீருவேன் என்று கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் கிளம்பியுள்ளார். ஆனால் தமிழக அரசு இதனை எதிர்த்து இதுவரை கேள்வி எழுப்பவில்லை. பந்திப்பூரில் இரவு வாகனப் போக்குவரத்தை தடை செய்த பின்னர் கூடலூர், ஊட்டியைச் சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் திட்டமான ஒசூரின் வளர்ச்சி பெங்களூரை ஒட்டி இருக்க வேண்டும். அதற்கு பொம்மசந்திரா, பெங்களூரில் இருந்து ஒசூர் வரைக்கும் மெட்ரோ இணைப்புத் திட்டம் அதவாது சென்னை, பெங்களூர் மெட்ரோ காரிடராக வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், அதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இவ்வாறு தமிழகத்திற்கு வர வேண்டிய நியாயமான தண்ணீர் முதல் எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு இல்லாமல் தமிழகத்தின் உரிமைகளை நான்காண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் முழுமையாக கோட்டை விட்டிருக்கிறார். கேரளத்துக்கு மட்டும் முக ஸ்டாலின் 4 முறை சென்றிருக்கிறார். ஆனால் தமிழகத்தின் பிரச்சனையை ஒருமுறை கூட பேசவில்லை.
ஆனால், இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், தெலங்கானா முதலமைச்சர் ஆகிய அனைவரையும் சென்னைக்கு அழைத்து பிரச்சனையே இல்லாத, கற்பனைக்காக, திமுகவின் கனவுக்காக தொகுதி மறுசீரமைப்பு என்ற பிரச்சனையை அரங்கேறிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழக மக்களுடைய உரிமையை தொடர்ந்து விட்டுக்கொடுத்து அரசியல் லாபம் வர வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கிய தொடர்பு கொண்டுள்ள முக ஸ்டாலினை எதிர்த்து இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் வெறும் நாடகம் மட்டுமே. தொகு மறுசீரமைப்பில் தமிழகம் உள்பட எந்த மாநிலமாக இருந்தாலும், குறிப்பாக தென் இந்திய மாநிலங்கள் எந்த ஒரு சீட்டையும் இழக்கப் போவதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 543 சீட்டில் 39 லோக்சபா சீட் 7.1 சதவீதம் நமக்கு உள்ளது. புதிய லோக்சபா எண்ணிக்கை எவ்வளவு இருந்தால் அந்தந்த மாநிலங்களின் விகிதாச்சாரத்தின்படி சீட்டுகள் இருக்கும்.
தமிழகத்திற்கு இத்தனை பிரச்சனைகள் இருக்கும்போது அவற்றை எல்லாம் மறைத்துவிட்டு, மறந்துவிட்டு தொகுதி மறுசீரமைப்பு நாடகத்தை நடத்தி வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications