ஈஷா யோகாவை தடை பண்ணுங்க.. களத்துக்கு வந்த மாதர் சங்கம்! ஆதரவாக வரும் அர்ஜுன் சம்பத்.. பரபர கோவை!
சென்னை: ஈஷா யோக மையத்துக்கு எதிராக ஜனநாயக மாதர் சங்கம் வரும் 21ஆம் தேதி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் அதே நாளில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஈஷா யோக மைய வளர்ச்சிப் பணிகளை ஆதரித்து இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
ஈஷா யோகா மையத்தில் தொடர்ச்சியாக பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், நில அபகரிப்பு, காலாவதியான மருந்துகள் பயன்படுத்துதல், யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக ஜனநாயக மாதர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் ஈஷா மையத்தை தடை செய்ய வேண்டும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கம் வரும் 21ஆம் தேதி போராட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனநாயக மாதர் சங்கம் போராட்ட அறிவித்துள்ள அதே நாளில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஈஷா யோக மைய வளர்ச்சிப் பணிகளை ஆதரித்து இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஈஷா யோக மையத்தின் மக்கள் நலத்திட்டங்களால் தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர்.
பழங்குடியின மக்கள் கல்வி மருத்துவம் தொழில் மேம்பாடு, பட்டியலின மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்த்துதல், நடமாடும் மருத்துவமனைகள், இலவச யோகப் பயிற்சி வகுப்புகள், கிராமப்புற மேம்பாடு , இளைஞர்களை ஊக்குவித்தல், விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பயிற்சி, விவசாயத்தை லாபகரமாக்குதல், விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்தல், கிராமப்புற விளையாட்டுகள் அதற்கான ஒலிம்பிக், கிராமிய உணவுத் திருவிழா, பசுமை கரங்கள் திட்டம் மூலம் மரம் நடுவதில் சாதனை, காவிரியின் குரல் இயக்கம் மூலம் நதிநீர் பாதுகாப்பு, மண்ணைக் காப்போம் Save Soil இயக்கம் மூலம் நமது தாய் மண்ணை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளுதலுக்கான சட்டங்களை கொண்டு வருதல்
தியானலிங்கம் கோயில், சூரிய குன்ட் தீர்த்தம், தியானம் யோகா மூலம் சமூக மேம்பாடு, ஆதியோகி சிலை அமைத்து சிவராத்திரி விழாவை உலகின் மிகப்பெரிய திருவிழாவாக மாற்றியது, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மயானங்களை மின்மயானங்களாக மாற்றி பராமரித்தல், காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பசுமை பாதுகாப்பு, இசை ஆன்மீகம் ஆகியவற்றில் மேம்பாடு என ஈஷா யோக மையத்தின் சமூகப் பணிகள் பரந்து விரிகின்றன.
ஈஷா யோக மையம் இப்பகுதிக்கு வராமல் இருந்திருந்தால் கிறிஸ்தவ மத போதகர் தினகரனின் காருண்யா நிறுவனம் இப்பகுதியை கபளீகரம் செய்திருக்கும். எனவே துவக்கத்திலிருந்து கம்யூனிஸ்ட்களும் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் உள்நோக்கத்துடன் ஜனநாயக மாதர் சங்கம் வரும் 21ஆம் தேதி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இவர்கள் சொல்லுகின்ற ஒரு குற்றச்சாட்டு கூட உண்மை அல்ல வேண்டுமென்றே அவதூறு கற்பிக்கும் உள்நோக்கத்துடன் தொடர்ந்து இதை செய்து வருகிறார்கள். தமிழக அரசு காவல்துறை இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். அதே நாளில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஈஷா யோக மைய வளர்ச்சிப் பணிகளை ஆதரித்தும்! அவதூறு பரப்புகின்றவர்களை கண்டித்தும் ஜனநாயக அறப்போராட்டம் நடைபெறும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications