தரைமட்டமான ‘அஜித்’ அமர்க்களம் தியேட்டர்! முடிவுக்கு வந்த 55 வருட சினிமா உலகம்
சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'அமர்க்களம்' படத்தில் இடம்பெற்றிருந்த ஸ்ரீநிவாசா திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கே அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்காக வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்த மலரும் நினைவுகளை மக்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் இருக்கும் ஸ்ரீநிவாசா தியேட்டரை தமிழ்நாட்டில் உள்ள 90ஸ் தலைமுறையினர் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார்கள். அந்தளவுக்கு இந்தத் திரையரங்கம் அஜித் மூலம் அந்தக் காலத்தில் பட்டி தொட்டி முழுக்க பிரபலமடைந்தது. அவர் நடிப்பில் வெளியான அமர்க்களம் படத்தில் ராகவா லாரன்ஸ் நடனத்தில் உருவான 'காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா.. கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா' என்ற பாடல் காட்சி இந்தத் திரையரங்கத்தில் எடுக்கப்பட்டதுதான். இதன் அருகே உள்ள காலி மைதானத்தில்தான் சூர்யாவின் 'ஆறு' படத்தின் குடிசைகளை செட் போட்டு எடுத்தார்கள்.

கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக மேற்கு மாம்பலம் மக்களை மகிழ்வித்து வந்த இந்தத் திரையரங்கத்தை இடித்து அடுக்குமாடிக்குடியிருப்பு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த தியேட்டர் அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை விரும்பி வரும் இடமாக இருந்து வந்தது. இங்கே அதிகபட்ச டிக்கெட் 20 ரூபாய்தான். 6 ரூபாய் இருந்தால் இங்கே படம் பார்த்துவிடலாம். 2018 வரை இதே விலைதான். பல மல்டி மால்ஸ் வந்துவிட்ட காலத்தில் கூட, இங்கே ரிக்ஷா தொழிலாளி முதல் சுமாரான பணக்காரர்கள் வரை படம் பார்த்து வந்தனர். அதற்குக் காரணம் டிக்கெட் மலிவு விலை என்பதுதான்.
இதன் உரிமையாளர் தேவநாதன் ஒரு காலத்தில் எம்.ஜிஆர் மற்றும் என்.டி.ஆருக்கு ஆலோசகராக இருந்தவர். 1963 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான 'பரிசு' படம்தான் முதன்முதலாக இங்கே தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 'என் கடமை' , 'நான் ஆணையிட்டால்' எனப் பல எம்.ஜி.ஆர் படங்கள் வரிசையாக வெளியாகின.

அதன்பின்னர் பொங்கல், தீபாவளி என சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், ராமராஜன், கார்த்திக், பிரபு, அஜித், விஜய் என பலரது படங்கள் இங்கே திரையிடப்பட்டு அவை 100 நாட்களை நிறைவு செய்துள்ளன. குறிப்பாக 'வைதேகி காத்திருந்தாள்' படம் இங்கே 100 நாட்களை நிறைவு செய்தது. இங்கே ரிலீஸ் செய்யப்பட்ட படங்களைப் போலவே பல படங்கள் ஷிப்ட் முறையில் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஷிப்ட் முறை என்பது ஒரு தியேட்டரில் வெளியாக ஓடிக்கொண்டிருக்கும் படம் இடைவேளை முடிந்ததும் அந்த ரீலைக் கொண்டுவந்து அடுத்த தியேட்டரில் காட்சிப்படுத்துவார்கள். அப்படிதான் இங்கே எம்.ஜி.ஆரின் 'எங்கவீட்டுப் பிள்ளை' சூப்பர் ஹிட் திரைப்படம் திரையிடப்பட்டது.
இந்தத் திரையரங்கம் தொடங்கப்பட்டது முதல் 1970கள் வரை எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் படங்களை மட்டுமே திரையிடப்பட்டன. அந்தளவுக்கு இந்த இரண்டு நடிகர்களின் சொர்க்க பூமியாக இந்த தியேட்டர் இருந்தது. இங்கே கடைசியாக வெளியான படம் விஜய் நடிப்பில் வந்த 'சர்க்கார்'. அதற்குப் பின் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. அதற்கு முன்பாகவே அதிக மக்கள் வரவில்லை என்றாலும் திரையரங்கம் இயங்கி வந்தது. கொரோனாவுக்குப் பின் மிகப்பெரிய அடி விழுந்ததால், இதனை நிர்வாகம் மூட முடிவு செய்தது.

இந்தத் திரையரங்கம் பற்றிய பேசிய அந்தக் கால சிவாஜி ரசிகர் ரவி, "எனக்குத் தெரிந்து இங்கே 'இருவர் உள்ளம்' என்ற படம் 5 மாதங்கள் வரை அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடியது. சிவாஜியின் 'சிவகாமியின் சபதம்' படத்தை இங்குதான் பார்த்தேன். இரண்டு வாரம் 3 காட்சிகளாகவும் அதன் பின் காலைக்காட்சி மட்டும் திரையிட்டனர். ஆக மொத்தம் அது 125 நாட்கள் ஓடியது.
சைதாப்பேட்டை மற்றும் மேற்கு மாம்பலம் மக்களின் திரை ஆர்வத்திற்கு ஸ்ரீனிவாசா, ஜெயராஜ், நேஷனல் ஆகிய மூன்று திரையரங்குகள்தான் தீனி போட்டன. அந்தக் காலத்தில் 60 பைசா தான் விக்கெட் விலை. பால்கனி இரண்டரை ரூபாய்தான். 2000 ஆம் ஆண்டு இங்கே 2 ரூபாய் இருந்தால் படம் பார்க்கலாம். அந்த அளவுக்கு சீப் அண்ட் பெஸ்ட் திரையரங்கம் இது.

இதில் பாக்ஸில் மொத்தம் 86 இருக்கைகள் இருந்தன. பால்கனியில் 803, முதல் வகுப்பில் 100 என ஆக மொத்தம் 989 இருக்கைகள் இருந்தன. இதனை மூடும் போது அதிகப்பட்ச டிக்கெட் விலை 20 ரூபாய்தான். குறைந்தபட்சம் என்பது வெறும் 6 ரூபாயாக இருந்தது. இது இடிக்கப்படுவதன் மூலம் எளிய மக்களின் அடையாளம் இது மறைந்துபோய் இருக்கிறது.












Click it and Unblock the Notifications