சென்னை தி நகரில் 3 மாடிக்கு அனுமதி வாங்கி 10 மாடி கட்டிய பிரபல நிறுவனம்.. இடிக்கும் பணி தொடங்கியது
சென்னை: சென்னை தியாகராய நகர், பாண்டிபஜாரில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் வணிக கட்டடத்துக்கு அனுமதி பெற்றுவிட்டு, அனுமதியை மீறி, 10 தளங்கள் வரை கட்டிய ஓர் தனியார் கட்டுமான நிறுவனத்தின் கட்டிடங்களை சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள் இடிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். மொத்தம் உள்ள 10 மாடியில் 3 மாடிகளை தவிர, மேலே உள்ள மாடிகளை இடிக்கும் பணி நவீன முறையில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் இரண்டு மாடி, 3 மாடிக்கு அனுமதி பெற்றுவிட்டு பின்னர் 7 மாடி, ஆறு மாடி என்று கட்டுவது கடந்த காலங்களில் அதிக அளவில் நடந்தது. குறிப்பாக சென்னை தியாகராய நகர் பகுதி உள்பட பல்வேறு வணிக பகுதிகளில் அதிகமாக நடந்தது. கடந்த 20 வருடங்களில் அதிக அளவில் நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டிருந்ததால், பெரிய சிக்கல் எழுந்தது. கட்டிடங்களை கட்டிய பின்னர் ஒவ்வொருவரும் முறைப்படுத்த அனுமதி கேட்பதும், அரசு அவர்களுக்கு இரக்கம் காட்டுவதும் தொடர்ந்து வந்தது.

அரசு அதிரடி
அதன்படியே பல்வேறு கட்டிடங்களை மன்னித்து அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை வரன்முறை செய்ய அனுமதித்தது. ஆனால் 2015ம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகு நிலைமை மெல்ல மெல்ல மாறத்தொடங்கியது. கடந்த 10 வருடங்களில் விதிமீறல்கள் மீது அடிக்கடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யாருக்கும் இரக்கம் காட்ட அரசும் தயாராக இல்லை. நீதிமன்றங்களும் தயாராக இல்லை.. கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெங்களூர் நிறுவனம்
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம், சென்னை பாண்டிபஜாரில் தரைத்தளத்துடன் கூடிய 3 தளங்களை கொண்ட வணிக கட்டிடத்தை கட்டுவதற்கு 1990-ம் ஆண்டு அனுமதி பெற்றிருந்தது. ஆனால் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் 10 மாடி தளங்களை கட்டியது. பின்னர், இந்த தளங்களை வரையறை செய்யும்படி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ.) விண்ணப்பம் செய்தது. ஆனால் இது மிகப்பெரிய விதிமீறல் என்பதால் அந்த கோரிக்கையை மாநகராட்சி ஏற்கவில்லை..
நீதிமன்றத்தில் வழக்கு
இதையடுத்து அந்த நிறுவனம் அரசிடம் மேல்முறையீடு செய்திருந்தது. அதுவும் ஒரு கட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட கட்டடத்துக்கு சீல் வைத்தது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA). மேலும் குறிப்பிட்ட கட்டடத்தை இடிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி முறைப்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதாவது விதிகளை மீறிய கட்டிட பகுதியை இடிப்பதற்கு 2019-ம் ஆண்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கு தள்ளுபடி
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கட்டுமானத்தை வரன்முறை செய்ய மறுத்து, பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து வழக்கு தொடராத கட்டுமான நிறுவனம், கட்டுமானத்தை இடிக்க எடுத்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் உத்தரவு
மேலும், அனுமதில்லாமல் கட்டப்பட்ட தளங்களை எட்டு வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை வரன்முறை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது என்றும் வரன்முறை சலுகையை வழக்கமான நடைமுறையாக அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்கள்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
ஒருபுறம் கட்டட திட்ட அனுமதியை வலியுறுத்தும் அதிகாரிகள், மறுபுறம் அவற்றை வரன்முறை செய்யக் கோரும் விண்ணப்பங்களை ஏற்பதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டபூர்வமாக்குவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இரக்கம் காட்டக்கூடாது
மேலும் அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், விதிமீறல் கட்டுமானங்கள் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காக விதிகளை மீறியவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
பாண்டி பஜார் கட்டிடம்
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தியாகராய நகர் பாண்டி பஜாரில் உள்ள அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. சி.எம்.டி.ஏ., மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் இந்த பணி நடைபெற்று வருகிறது. கட்டிடத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் அருகில் செல்லாத வகையில் இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இடிக்கும் பணி
அனுமதி பெறப்பட்ட தரைதளத்துடன் கூடிய 3 தளங்களை தவிர்த்து, அதற்கு மேல் உள்ள 6 தளங்களை பயன்படுத்த முடியாத அளவுக்கு மதில் சுவர் மற்றும் தரையை துளையிடும் எந்திரம் (டிரில்) மூலம் இடிக்கும் பணியில் சி.எம்.டி.ஏ.வைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் விரைவில் இந்த பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications