சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் திட்டத்துடன் அந்த தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக களப்பணியாற்றி வந்த புதிய நீதிக்கட்சி மாநில அமைப்புச் செயலாளர் வி.எஸ்.கார்த்தி, மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி அறிவிக்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்து கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக, பாஜக சார்பில் தலா ஒரு தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி-யை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.

திமுகவின் அறிவு முகமாக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மதுரை மத்திய தொகுதியில் வீழ்த்துவது சாதாரண காரியமல்ல என்பதை உணர்ந்த ஏ.சி. சண்முகம், அவர் சார்ந்த அதே பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சினிமா பிரபலம் சுந்தர் சி-யை களமிறக்கி உள்ளார். மதுரை மத்தியில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமாக உள்ளனர். அவர்களின் வாக்குகள் முழுமையாக பிடிஆர் பக்கம் செல்ல விடாமல் தடுக்கவும் சுந்தர் சி களமிறக்கப்பட்டுள்ளார்.
சுந்தர்.சி மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு மதுரை மத்திய தொகுதிக்கு வேட்பாளர் சுந்தர்.சி-யும், கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் இன்று வந்தனர். இந்நிலையில் புதிய நீதிக் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் வி.எஸ்.கார்த்தி கட்சியிலிருந்து வெளியேறி ஏ.சி.சண்முகத்துக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
வழக்கறிஞர் வி.எஸ்.கார்த்தி மதுரையைச் சேர்ந்தவர். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர். மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்து கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
சமீபத்தில் மதுரை சுற்றுச்சாலையில் 150 அடி உயரத்தில் வ.உ.சி சிலை அமைக்க குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அழைத்து வந்து அடிக்கல் நாட்டு விழா நடத்தினார். அந்த விழாவில் இயக்குநர் சுந்தர் சி-யும் பங்கேற்றார். அதிமுக - பாஜக கூட்டணியில் மதுரை மத்திய தொகுதி கிடைத்ததும் தான் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவோம் என நினைத்திருந்த நிலையில் சென்னையை சேர்ந்த இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தார் வி.எஸ்.கார்த்தி.
கட்சித் தலைமையின் செயலால் கடும் அதிருப்தியடைந்து கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். அவரை தொடர்ந்து இவரது ஆதரவாளர்கள் பலரும் தங்கள் கட்சி பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். திரைப் பிரபலமான சுந்தர்.சி-யை களமிறக்கி பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தோற்கடிக்க அதிமுக - பாஜக கூட்டணி திட்டமிட்ட நிலையில், புதிய நீதிக் கட்சியின் முன்னணி நிர்வாகி கட்சியில் இருந்து வெளியேறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications