பதவியல்ல.. பொறுப்பு! துணை முதல்வராக நியமித்ததும்.. முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி
சென்னை: துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். மேலும் துணை முதல்வர் என்பது பதவியல்ல, பொறுப்பு என்றும், தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்திற்காக பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்து தந்த பாதையில், ஸ்டாலின் வழிகாட்டலில் சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம் என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியாகியது. இன்று மாலை 3.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி முன் பதவியேற்க உள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவியிடம் ஒப்புதல் கோரி கடிதம் எழுதப்பட்டது. இந்த கடிதத்துக்கும் ஆளுநர் ஆர்என் ரவி நேற்று இரவே ஒப்புதல் வழங்கியுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கிறார்கள். முக்கியமாக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இதன்படி, இன்று மாலை 3.30 மணிக்கு தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. அமைச்சரவை மாற்றத்தின்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல் மேற்குறிப்பிட்ட 4 பேரும் புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் துணை முதல்வர் பதவி கொடுத்ததும், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். மேலும் துணை முதல்வர் என்பது பதவியல்ல, பொறுப்பு என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
'துணை முதலமைச்சர்' என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!.. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications