விவாதத்துக்கு நான் ரெடி.. எடப்பாடியின் சவாலுக்கு உதயநிதி பதில்
சென்னை: நான் முதல்வராக இருந்தபோது என்னென்ன செய்தேன் என சொல்லத் தயார். முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து நீங்கள் சொல்லுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால் விட்டிருந்த நிலையில் அந்த விவாதத்துக்கு தயாராக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் சாம்பியன் கிட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்கட்டமாக 500 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிட்டுகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த திட்டங்கள் உங்களுக்காக முதல்வரால் உருவாக்கப்பட்ட திட்டங்கள்.

இத்திட்டங்களை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு விளையாட்டுத் துறையில் முதன்மையான மாநிலமாக விளங்க
வேண்டும். எஸ்.டி.டி.ஏ. பயிற்சியாளர்களான உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. உங்களுக்கு என்னென்ன தேவையோ அவற்றை அனைத்தையும் துணை முதல்வராக மட்டுமல்லாமல், உங்கள் வீட்டுப் பிள்ளையாக பெற்றுத் தருவேன்.
ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அவரவர்களுக்காக மட்டும் விளையாடுவதில்லை. அவர்களுடைய குடும்பத்துக்காக, ஊருக்காக, இந்த மாநிலத்துக்காக விளையாடுகின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியதாவது: விரைவில் சென்னையில் விளையாட்டு மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நிலப் பிரச்னைகள் இருந்ததால் தாமதமாகி வந்தது. அரசு திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த முதல்வர் ஸ்டாலின் தயாரா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ள கேள்விக்கு, விவாதத்துக்கு என்னை அழைத்தால் நான் செல்வேன் என்று கூறினார்.
மேலம், தொடர்ந்து கலைஞர் பெயர் திட்டங்களுக்கு வைக்கப்படுவது குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது. யாருடைய பெயர் வைக்க வேண்டுமோ அவரின் பெயரைத்தான் வைக்கிறோம். பொதுவாக விமர்சனம் என்பது வரத்தான் செய்யும். கலைஞரின் பெயரை வைக்காமல் வேறு யாருடைய பெயரை வைக்க வேண்டும் என்றார்.
எடப்பாடி ஆட்சி குறித்தும், அதிமுக ஆட்சி குறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதைத்தொடர்ந்து, இரண்டு ஆட்சிகளிலும் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து நாங்கள் நேரடியாக விவாதம் செய்ய தயாராக உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அப்போது அவர் பேசுகையில், நான் முதல்வராக இருந்த காலத்தில் என்னென்ன சாதனைகள் செய்தேன் என புள்ளிவிவரத்தோடு துண்டுச்சீட்டு இல்லாமல் நான் சொல்கிறேன்.
முதல்வா் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு என்னென்ன மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என்று நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் போடும் மேடைக்கே நான் வருகிறேன். மக்கள் கேட்கட்டும், மக்களே தீா்ப்பு கொடுக்கட்டும். அதற்கு நாங்கள் தயாா் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications