"அந்த அறிவு கூட இல்லை அவருக்கு".. ஆதவ் அர்ஜுனா கருத்தால் சூடாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை: விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு சூடாக பதில் கொடுத்துள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். "அந்த அறிவுகூட இல்லை அந்தாளுக்கு.." என கோபமாக ரியாக்ட் செய்துள்ளார் உதயநிதி.
சென்னையில் நேற்று 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று நூலை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய். இந்த விழாவில் பேசிய வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனரும், விசிக துணைப் பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா, 2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனா பேச்சால் சலசலப்பு: ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதை போல, பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது. இனி தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும்.
2014ல் குடும்ப அரசியல், ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து மோடி ஆட்சியை பிடித்தார். அவரை இதுவரை அசைக்க முடியவில்லை. அதேபோல தமிழகத்தில் மதம், சாதிக்கு எதிரான கருத்தியலை உருவாக்கியதை போல, ஊழலுக்கு எதிரான கருத்தியலை கொண்டுவர வேண்டும். தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்து விட்டனர். தமிழகத்தில் இனி மன்னராட்சிக்கு ஒருபோதும் இடம் இல்லை" என்று பேசினார்.
விசிக துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது. விசிகவுக்குள்ளும் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு கடுமையான எதிர்வினைகள் எழுந்து வருகின்றன.
உதயநிதி ஸ்டாலின் பதிலடி: இந்நிலையில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு சூடாக பதில் கொடுத்துள்ளார். இன்று, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், நேற்று நடந்த நிகழ்வில் ஆதவ் அர்ஜுனா, "மன்னராட்சி இனி இருக்கக்கூடாது, பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது" எனப் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அந்த அறிவு கூட இல்லை: அதற்கு சூடாக பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், "யாருங்க பிறப்பால் முதல்வர் ஆனது? மக்கள் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆனார். அந்த அறிவு கூட இல்லை அவருக்கு.. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிதான் நடைபெறுகிறது. " என சூடாக ரிப்ளை கொடுத்துள்ளார்.
அதேபோல அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "சினிமா செய்திகள் பார்ப்பதில்லை" என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications