ஆ ராசா பற்றிய பேச்சு..பாஜக மாஜி தலைவர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி
சென்னை: திமுக எம்பி ஆ ராசா குறித்து இழிவாக பேசியதாக பாஜக கோவை மாவட்ட முன்னாள் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் ஆ ராசா. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் நீலகிரி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். ஆ ராசா மேடைகளில் பேசும் பேச்சு என்பது அடிக்கடி விவாதத்தை கிளப்பும்.

அந்த வகையில் அவர் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, ஆ.ராசாவை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் கடந்த 2022ம் செப்டம்பர் மாதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக கோவை மாவட்ட முன்னாள் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி முதலமைச்சர் ஸ்டாலின், ஆ.ராசா மற்றும் பெரியார் ஆகியோரை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக நிர்வாகி அனந்த குமார் என்பவர் புகார் அளித்தார். இதனடிப்படையில், பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் பாலாஜி உத்தமராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கு நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ் ஆஜராகி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனையடுத்து பாலாஜி உத்தமராமசாமி, ஆ.ராசா குறித்து தனிப்பட்ட முறையில் பேசியதற்காக மூன்றாவது நபர் எப்படி புகார் அளிக்க முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். பாலாஜி உத்தமராமசாமி பேசியதை தான் ஏற்கவில்லை என தெரிவித்த நீதிபதி இந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது தவறு எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கோபி, ஆ. ராசா மற்றும் அவரது குடும்பம் குறித்து மிகவும் இழிவாக பேசியுள்ளதாக கூறினார். இதையடுத்து, பாலாஜி உத்தமராமசாமி மீதான வழக்கின் விசாரணைக்கு தடைவிதித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications