மதுவுக்கு எதிராக முழக்கம்... பாஜக அலுவலகம் முற்றுகை முயற்சி... கைது செய்த போலீஸ்
சென்னை: மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழக பாஜக அலுவலகத்தை 6 பேர் கொண்ட குழு முற்றுகையிட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயம் முன்பு மதுக்கடைகளை மூடக்கோரியும், மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தியும் 6 பேர் கொண்ட குழு முற்றுகை போராட்டம் நடத்த முயன்றது. மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது எனவும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இது குறித்து தகவலறிந்து சென்ற தி.நகர் போலீஸ், அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றது. கையில் காங்கிரஸ் கொடியை போன்று பிடித்திருந்ததால் முதல் காங்கிரஸ் கட்சியினர் தான் போராட்டம் நடத்துகிறார்கள் என தொலைவில் இருந்து பார்த்தவர்கள் நினைத்துள்ளனர். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதனிடையே இவர்கள் போராட்டம் நடத்தியதின் பின்னணி, அவர்களை யாரேனும் தூண்டிவிட்டார்களா என்றக் கோணத்தில் பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மத்திய அரசு நினைத்தால் தான் மாநிலங்களில் மதுக்கடைகளை மூட முடியும் என்பதால் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்ததாக தேசிய மக்கள் சக்தி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.














Click it and Unblock the Notifications