தேவயானி மகளா இது? இனியாவின் இனிய குரல்! அவர் நினைச்சா என்ன வேணா செய்யலாம்.. சரத்குமார் சொன்ன விஷயம்!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை தேவயானியின் மகள் இனியா கலந்து கொண்டு பவதாரணி பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலை பாடினார். தொடர்ந்து அவருக்கு பாராட்டு குவிந்து வரும் நிலையில் நடிகையின் மகள் என்ற அடிப்படையில் அவர் சினிமாவிலேயே நேரடியாக பாடி இருக்கலாம். ஆனால், தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாகவும் அவரை பாராட்டுவதாகவும் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
ஜீ தமிழ் சரிகமப சீனியர், ஜூனியர் என இரண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல பாடகர்களை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் அந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது சீசன் 5 பிரம்மாண்டமாக தொடங்கியது.
குறிப்பாக இந்த சீசனில் நடிகை தேவயானியின் மூத்த மகள் இனியா கலந்து கொண்டார். அந்த ஆடிஷனின் போது பவதாரணி பாடியிருந்த மயில் போல பொண்ணு ஒன்னு பாடலை இனியா பாடினார். கண்களை கட்டியபடி நடுவர்கள் அந்த பாடலைக் கேட்டு இனியாவை போட்டிக்கு செலக்ட் செய்தனர். அதற்குப் பிறகுதான் இனியா தேவயானி மகள் என்பதே நடுவர்களுக்கு தெரியுமாம்.

தனது மகள் தனது சொந்த முயற்சியால் முன்னேற வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில், அவராகவே முயன்று கலந்து கொண்டதாக நடிகை தேவயானியும் கூறியிருந்தார். இந்த நிலையில் தனது திறமையால் முன்னுக்கு வர வேண்டும் என்ற இனியாவின் தைரியத்தையும் நேர்மையையும் பாராட்டுவதாக நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," மக்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய மாபெரும் திறமையான நடிகை தேவயானி அவர்களின் மகள் இனியா அவர்கள், புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல, Zee தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப சீசன் 5 போட்டியாளராக, மறைந்த பாடகி பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி நம்மை எல்லாம் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். திறம்பட இசையை கற்று நேர்த்தியாக பாடி அசத்தியிருப்பது மிக மிக அருமை.
தமிழ் சினிமாவின் மாபெரும் கதாநாயகியின் மகள் என்ற பரிந்துரை கொண்டு, நேரிடையாக திரைப்பட பாடல்களில் பாடி இசையுலகில் தடம் பதித்திருக்க முடியும். ஆனால், தனது சொந்த முயற்சியால் உயர்ந்து சினிமாத்துறையில் கதாநாயகியாக சாதிக்க ஆர்வம் கொண்டு, சரிகமப நிகழ்ச்சி மேடையை சரியாக பயன்படுத்தி, மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பது பாராட்டுக்குரியது.
தனது இனிய குரல் வளத்தால் இசையில் நம்மை மகிழ்வித்த இனியா, அவரது அதீத திறமையால் சினிமாத்துறையின் பல பாரிமாணங்களிலும், பல்வேறு மொழிகளில் பாடும் வாய்ப்பும் பெற்று வாழ்வில் மென்மேலும் உயர்ந்து, அவரது வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்தி, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என கூறியுள்ளார். அந்த பதிவில் பலரும் இனியாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications