பங்காரு அடிகளார் மறைவு! மேல்மருவத்தூரில் குவியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.. இறுதி சடங்கு எப்போது
செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் திடீரென மாரடைப்பால் இன்று காலமான நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தப் பல ஊர்களில் இருந்தும் மக்கள் மேல்மருவத்தூரில் குவிந்து வருகிறார்கள்.
செங்கல்பட்டு மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். அவரது அருள் வாக்குகள் ஏழை மக்கள் பலருக்கும் நம்பிக்கையாக இருந்துள்ளது. உலகெங்கும் பக்தர்கள் கொண்ட இவர், ஆன்மீகத்தில் பல புரட்சிகளைச் செய்துள்ளார்.

உலகெங்கும் இருக்கும் பக்தர்கள் இவரை அன்பாக "அம்மா" என்றே அழைப்பார்கள். ஆன்மீகம் மட்டுமின்றி ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல கல்வியை கற்றுத் தரவும் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேல்மருவத்துவர்: ஆன்மீகத்தில் பல்வேறு புரட்சிகளைச் செய்த இவர், தனது பக்தர்களுக்குப் பெரிய நம்பிக்கையாகவே இருக்கிறார். ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கருவறையில் பெண்களைப் பூஜை செய்யலாம் என்றும் மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தினார். இப்படி ஆன்மீகத்தில் இவர் செய்தது மிகப் பெரிய புரட்சியாகவே பார்க்கப்படுகிறது.
அவரது பணிகளைப் பாராட்டும் வகையில் மத்திய அரசு அவருக்குக் கடந்த 2019இல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கவுரவித்துள்ளது. இதற்கிடையே கடந்த சில காலமாக நெஞ்சுச் சளியால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்துள்ளது.
குவியும் பக்தர்கள்: பங்காரு அடிகளார் மறைவு அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பக்தர்கள் அஞ்சலி செலுத்த இப்போது மேல்மருவத்துரில் குவிந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இருந்தும் அஞ்சலி செலுத்தப் பக்தர்கள் மேல்மருவத்துரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் மேல்மருவத்துவர் ஆதி பராசக்தி கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இதற்கிடையே அவரது உடல் இப்போது மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. "அம்மா" இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.
இறுதிச் சடங்கு: பங்காரு அடிகளாருக்கு நாளைய தினம் இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தெரிகிறது. கடைசியாக ஒரு முறை தங்கள் பங்காரு அடிகளாரைப் பார்க்க வேண்டும் என்று பல ஊர்களில் இருந்தும் மக்கள் மேல்மருவத்துரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். ஆதி பராசக்தி கோயிலில் குவிந்துள்ள பக்தர்கள் கதறி அழுதபடி வேதனையில் உள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வருகிறது.
பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த நாளைய தினம் பல முக்கிய தலைவர்கள். அரசியல்வாதிகள் நேரில் வருவார்கள் எனத் தெரிகிறது. பங்காரு அடிகளார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நவராத்திரி விழாவில் கலந்து கொண்டிருந்தார். இப்போது திடீரென அவர் மாரடைப்பால் உயிரிழந்தது அவரது பக்தர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications