சபரிமலையில் மோசமான சூழல்.. கூண்டில் அடைக்கப்படும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் இல்லை.. ஓபிஎஸ் ஆவேசம்!
சென்னை: சபரிமலையில் தமிழக பக்தர்கள் தாக்கப்படுவதையும், அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பதையும் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுக்காதது வியப்பாக இருக்கிறது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நாளை மகர விளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில், ஜோதி தரிசனத்தை காண சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பொங்கல் விடுமுறை என்பதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நேற்று முதல் மகர ஜோதியைக் காண பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றுள்ளனர்.

பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அய்யப்பனை தரிசிக்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்டவை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பல இடங்களில் பக்தர்களின் வாகனங்களை போலீசார் நீண்ட நேரம் தடுத்து நிறுத்தி வைப்பதாகவும் கூறப்படுகிறது. கடுமையான நெரிசலில் மக்கள் கொடுமையான துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சபரிமலை கூட்ட நெரிசல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் மகர ஜோதியினை முன்னிட்டு சபரிமலையில் வீற்றிருக்கும் சுவாமி அய்யப்பனை தரிசிக்க இந்தியா முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில், இந்த ஆண்டு மகர ஜோதியினை முன்னிட்டு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் திருக்கோயில் நிர்வாகம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளது மிகுந்த வேதனைக்குரியது.
சபரிமலையில் உள்ள சுவாமி அய்யப்பனை தரிசிக்க வெளி மாநிலங்களிலிருந்து பக்தர்கள் சென்றாலும், தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம். இந்த ஆண்டு, பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ள நிலையில், பம்பையிலிருந்து சன்னிதானம் செல்ல மட்டும் 20 மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளதாகவும், கூண்டுகளில் அடைக்கப்படும் பக்தர்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட எவ்வித உணவுப் பொருட்களும் வழங்கப்படுவதில்லை என்றும், கழிப்பறை வசதிகள் இல்லை என்றும், முறையான வரிசை பராமரிக்கப்படவில்லை என்றும், சில நேரங்களில் காவல் துறையினரின் தாக்குதலுக்கு பக்தர்கள் ஆட்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

சபரிமலை சன்னதி மேம்பாலத்தில் நெரிசலில் சிக்கிய சிறுமியை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்கும் அளவுக்கு நிலை உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிலர் இறந்துவிட்டதாகவும், ஆனால் இது குறித்த செய்தி வெளிவருவதில்லை என்றும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர். வடமாநிலங்களில் தமிழர்கள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்கும் தமிழக முதலமைச்சர் அவர்கள், சபரிமலையில் தமிழக பக்தர்கள் தாக்கப்படுவதையும், அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பதையும் பற்றி குரல் கொடுக்காதது வியப்பாக இருக்கிறது.
இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படாத வகையில், திருமலையில் இருப்பது போன்று, அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய ஓர் வாரியத்தினை சபரிமலையில் அமைக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கையினை கேரள அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விடுக்க வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்" என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications