அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது 'ஊழல்' புகார்கள்.. முதல்வருடன் டிஜிபி கந்தசாமி திடீர் மீட்டிங்!
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை டிஜிபி கந்தசாமி இன்று மாலை சந்தித்து பேசினார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அதிமுக அரசில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தது. ஆனால் அந்த புகார்கள் மீது அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில புகார்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டன. சில ஊழல் புகார்கள் நீதிமன்றம் வரை சென்றன.
இதேபோல் தேர்தலுக்கு முன்பு தமிழக ஆளுநரிடம் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக அமைச்சர்கள் மீது மிகப்பெரிய பட்டியலுடன் ஊழல் புகார்களை திமுக கொடுத்து. அப்போது அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் அதில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.

விசாரணை
தேர்தல் பிரசாரத்தின் போது திமுக ஆட்சியமைந்ததும் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். குறிப்பா கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது வேலுமணி கடுமையாக விமர்சித்து நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில் வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விரிவான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது,

நடவடிக்கை உறுதி
இதேபோல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகவும் கோடிகள் மோசடி செய்ததாக அண்மையில் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. இவர் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் பொதுவெளியில் தரக்குறைவான விமர்சனங்களை திமுக மீது வைத்தார். எனவே ராஜேந்திர பாலாஜி மீது கண்டிப்பாக நடவடிக்கை பாயும் என்று சொல்லப்படுகிறது.

தூசி தட்ட முடிவு
முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை பலர் மீது ஊழல் புகார்களை தூசி தட்ட ஸ்டாலின் முடிவு செய்துவிட்டாராம். முதல்வர் ஸ்டாலின் அண்மையில் காலியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு டிஜிபியாக கந்தசாமி ஐபிஎஸ் என்ற அதிகாரியை நியமித்தார். இவர் சிபிஐ அதிகாரியாக இருந்த போது குஜராத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையே கைது செய்தவர் என்பதால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சற்று கலக்கத்தில் இருக்கிறார்கள்.

விஜயபாஸ்கர்
முதலில் எஸ்.பி.வேலுமணி. தங்கமணி, பின்னர் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு போட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆயத்தமாகி வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது கைவசம் உள்ள ஆதாரங்களை சரிபார்ப்பது, கூடுதல் ஆதாரங்களை திரட்டுவதுமாக பணிகள் நடந்து வருகிறதாம். முன்னாள் அமைச்சர்கள் வகித்த பதவிகளில் தற்போது உள்ள திமுக அமைச்சர்களிடமும் அந்தந்தத் துறைகளில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த விவரங்களையும் கோரி உள்ளதாம் லஞ்ச ஒழிப்புத் துறை.

நடவடிக்கை உறுதி
இப்படியான பரபரப்புகளுக்கு மத்தியில் கொரோனா 2வது அலையும் வேகமாக குறைந்து வருகிறது. விரைவில் கொரோனா 2வது அலை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை டிஜிபி கந்தசாமி இன்று மாலை திடீரென சந்தித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே பெரிய நடவடிக்கைகள் கொரோனா அலை ஓய்ந்த பின் இருக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications