சங்கர் ஜிவாலுக்கு பதில் சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்! யார் இவர்? முழு பின்னணி
சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் சைலேந்திரபாபு. இவர் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். இதனால் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை மாநகர காவல் ஆணையராக செயல்பட்டு வந்த நிலையில் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையர் யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்த பொறுப்புக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோரின் பெயர் முன்னிலையில் இருந்தது. அதன்படி சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை உள்துறையின் கூடுதல் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்கும் சந்தீப் ராய் ரத்தோர் யார்? என்பது பற்றிய பின்னணி தகவல் வெளியாகி உள்ளது. சந்தீப் ராய் ரத்தோர் டெல்லியை சேர்ந்தவர். இவர் டெல்லியில் உள்ள டெல்லி ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் பள்ளியில் எம்ஏ ஜியோகிராபி படித்தார். மேலும் எம்பில் படிப்பையும் முடித்துள்ளார்.
மேலும் இவர் 1992 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் சென்னை ஆவடியின் முதல் காவல் ஆணையராக செயல்பட்டு வந்தார். அதன்பிறகு கடந்த மாதம் டிஜிபி அந்தஸ்து பெற்று டிரெய்னிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 31 ஆண்டுகளாக ஐபிஎஸ்ஸாக பணியாற்றி வரும் நிலையில் பல்வேறு முக்கிய வழக்குகளை கையாண்டுள்ளார்.
பிரெஞ்ச் சீரியல் கில்லர் (பிகினி கில்லர்) சார்லஸ் சோப்ராஜ் வழக்கை இவர் விசாரித்த அனுபவம் கொண்டவர். தென்கிழக்கு ஆசியாவில் 1970 காலக்கட்டத்தில் 30 பெண்களை கொலை செய்து சீரியல் கில்லராக உருவெடுத்த சார்லஸ் சோப்ராஜ் வழக்கில் இவர் விசாரணை நடத்திய அனுபவம் கொண்டவர். மேலும் என்கவுண்ட்டரும் செய்துள்ளார்.
முன்னதாக 2001ல் சென்னை போக்குவரத்து பிரிவு இணை ஆணையராகவும் செயல்பட்டார். இந்த வேளையில் பராமரிப்பு செலவைக் குறைக்கும் வகையில் டிராபிக் சிக்னல்களில் விளக்குகளுக்கு பதில் எல்இடி அறிமுகம் செய்ததில் முக்கிய பங்காற்றினார். அதன்பிறகு கடந்த 2017 ல் சிறப்பு அதிரடி படை பிரிவில் பணியாற்றி இருந்தார்.












Click it and Unblock the Notifications