காவல்துறையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்.. இன்னும் ஒரே வாரம்! டிஜிபி சங்கர் ஜிவால் போட்ட ஆர்டர்
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பட்டியலை ஜனவரி 10ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும் ஆணையிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையமும், லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பணியிட மாற்றம் பட்டியலை தயாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சொந்த ஊரில் அல்லது ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரியும் போலீசார் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஜூன் 30ஆம் தேதிக்குள் ஒரே இடத்தில் 3 ஆண்டு பணி நிறைவடையும் அதிகாரிகளின் பட்டியலை தயாரிக்குமாறும் பதவி உயர்வு பெற்று சொந்த ஊரிலோ அல்லது ஒரே இடத்திலோ பணியில் இருந்தால் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவல்துறையில் எஸ்.ஐ முதல் ஏடிஜிபி வரையிலான அதிகாரிகளின் பட்டியலை வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்றுள்ள அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் டிஜபி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதிகாரிகளை தேர்தல் பணிக்கு அனுப்பக் கூடாது என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் ஆணை பிறப்பித்துள்ளார். இந்த சுற்றறிக்கையானது இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின் படி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அங்குள்ள அரசியல் பிரமுகர்களுடன் நல்ல பரிச்சயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களுக்கு ஆதரவாக செயல்படலாம் என்பதால் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications