பதற வைத்த சம்பவம்.. அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு! இனி கடுமையான ஆக்ஷன்
சென்னை: சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இரவு நேர பாதுகாப்பையும் அதிகரிக்கவும், பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மருத்துவமனை டீன்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், நேற்று பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புற்றுநோய் மருத்துவரான பாலாஜி, ஒரு இளைஞரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த டாக்டர் பாலாஜி, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாயாருக்கு அந்த மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் மற்றும் 3 பேர் நேற்று மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தான் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரைக் குத்தியுள்ளார் விக்னேஷ்.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷை, மருத்துவமனை அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் மடக்கிப் பிடித்த நிலையில் போலீசார் வந்து கைது செய்தனர். விக்னேஷ் மீது கிண்டி போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நேற்றிரவு சைதாப்பேட்டை பெருநகர 9வது குற்றவியல் நீதிமன்றத்தில் விக்னேஷ்வரன் ஆஜர்படுத்தப்பட்டார். விக்னேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். புறநோயாளிகள் பிரிவு மற்றும் அவசரமில்லா அறுவை சிகிச்சை ஆகியவற்றைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், நாளைக்கு பணிக்கு திரும்புவதாகவும் தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்தது.
இந்நிலையில், காவல்துறை டிஜிபி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அனைத்து மருத்துவமனைகளிலும் இரவு நேர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மருத்துவமனைகளில் தாக்குதல் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் ரோந்து போலீசாரை நியமித்து அனைத்து மருத்துவமனைகளையும் கண்காணிக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பாக போலீசாருடன் மருத்துவமனை டீன்கள், பொறுப்பாளர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவர் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, சென்னையில் உள்ள எழும்பூர், சைதாப்பேட்டை, காந்தி நகர், கே.கே.நகர், அமைந்தகரை, பெரியார் நகர் உள்ளிட்ட 7 அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புறக்காவல் நிலையங்களில் சுழற்சி முறையில் 2 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications