நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கு.. சென்னை குடும்ப நல நீதிமன்றம் போட்ட உத்தரவு
சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்கு இருவருமே ஆஜராகாததால் வரும் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி, பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தனித்தனியாக வாழ்ந்த வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பரஸ்பரம் பிரிவதாக இருவரும் அறிவித்தனர். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இந்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டனர்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்த்து வைத்து இருவரையும் மீண்டும் இணைக்க அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சித்தனர். ஆனால் இருவருமே விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்து விட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்துதான் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி பரஸ்பரம் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்கள் திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இவர்கள் தாக்கல் செய்த மனு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஆஜராகாததால், வரும் 19 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications