"பல்லை" பிடுங்கியாச்சு.. குழி பறிக்கும் பாஜக சீனியர்கள்.. அண்ணாமலை ஏமாற்றம்.. திமுக எம்பி ட்வீட்
சென்னை: தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையின் அதிகாரங்களை தலைமை பறித்துவிட்டதால் விரக்தியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன் வைத்துள்ளார் என திமுக எம்ப செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு கடுமையாக உள்ளது. அதிலும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தை மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் பாஜகவினருக்கும் இடையே பயங்கர கருத்து மோதல் ஏற்பட்டது.
குழிதோண்டும் பாஜக “தலைகள்”.. விரக்தியில் அண்ணாமலை! “செருப்பு” பதிவுக்கு காரணம் சொன்ன செந்தில்குமார்
அமைச்சர் பிடிஆர்
இதையடுத்து அமைச்சர் பிடிஆரின் காரை வழிமறித்து பாஜகவினர் செருப்பு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த செருப்பு வீச்சு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு ஆடியோ வெளியானது. அதில் பாஜக தலைவர் அண்ணாமலை இந்த செருப்பு வீச்சு குறித்து பேசியதாக தெரிகிறது.
ஆடியோ வைரல்
இந்த ஆடியோ வைரலான நிலையில் இதில் உள்ள குரல் என்னுடையதுதான், ஆனால் அதில் பேசிய சில கருத்துகளை திமுகவினர் சேர்த்தும் நீக்கியும் உள்ளனர் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் பிடிஆர் அவர்களே உங்கள் முன்னோர்களின் இனிஷியலுடன் வாழும் உங்களாலும் உங்கள் கூட்டாளிகளாலும் சுயமாக உருவான விவசாயியின் மகனை ஏற்க முடியாது.
பெரிய பரம்பரை
பெரிய பரம்பரையிலும் வெள்ளிக் கரண்டியிலும் பிறந்ததை தவிர்த்து இந்த ஜென்மத்தில் நீங்கள் பயனுள்ள எதையாவது செய்துள்ளீர்களா. நீஙகள் அரசியலுக்கும் தமிழக மாநிலத்திற்கும் சாபக் கேடு. என் செருப்புகளுக்கு கூட நீங்கள் தகுதியில்லை என தரம் தாழ்ந்து அமைச்சர் பிடிஆரை அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதை திமுகவினர் கண்டித்து வருகிறார்கள்.
திமுக எம்பி செந்தில்குமார்
இதுகுறித்து திமுக எம்பி செந்தில்குமார் கூறுகையில், அண்ணாமலை விரக்தியிலும் ஏமாற்றத்திலும் பேசி வருகிறார். அவரது செயல்பாடுகளில் பாஜக தலைமைக்கு திருப்தி இல்லை. அவரது செயல்பாடுகளை கவனிக்க மத்திய இணை அமைச்சர் முருகனை தேசிய பாஜக தலைமை நியமித்துள்ளது. மேலும் அண்ணாமலையின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. தேசிய பாஜக தலைமையை திருப்திப்படுத்துவதாக நினைத்து எதை எதையோ செய்து வருகிறார். அவருக்காக பெரிய குழியை கட்சியின் மூத்த தலைவர்கள் பறித்து வருகிறார்கள் என செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் அதிகாரம் பறிப்பு?
கே டி ராகவன் வீடியோ விவகாரம், பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு, அது தொடர்பாக அண்ணாமலை பேசிய ஆடியோ உள்ளிட்டவைகளால் அண்ணாமலை மீது தலைமை அதிருப்தியில இருக்கிறதாம். இதனால் அண்ணாமலையின் தலைமை பதவியை பறிக்காமல் அவரது அதிகாரங்களை மட்டும் குறைத்துள்ளது. இதற்காக மத்திய இணை அமைச்சர் எல் முருகனை மீண்டும் தமிழக பாஜகவை பார்த்துக் கொள்ளும்படி அவருக்கு கமலாலயத்தில் தனி அறையே ஒதுக்கப்பட்டுள்ளதாம். இதைத்தான் திமுக எம்பி கூறுகிறார்.