எத்தனை பெரியார் வந்தாலும் திருந்த மாட்டீங்களா? மகாவிஷ்ணுவை வெளுத்த தயாநிதி மாறன் எம்பி
சென்னை: எவ்வளவு பெரியார் வந்தாலும், இந்த மாதிரி ஒருத்தன், ரெண்டு பேரு வந்து நம்மை பின்னுக்குத் தள்ளி மூடநம்பிக்கையில் மூழ்கடிச்சிடுவாங்க என மகாவிஷ்ணு குறித்து எம்பி தயாநிதி மாறன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பை சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாக கூறியிருந்தார்.

அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில் கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என மாணவர்கள் மத்தியில் மகாவிஷ்ணு பேசினார். மேலும் போன ஜென்மத்தில் செய்த பாவங்களால்தான் கண் தெரியாமல் , கை, கால்கள் இயங்காமல் பிறக்கிறார்கள் என்றும் நெருப்பை அள்ளி கொட்டும் அளவுக்கு மாற்றுத்திறனாளிகள் மீது அவதூறு கருத்தை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகி பலரது கண்டனங்களுக்கு ஆளானது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீஸார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அரசு பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பிய மகாவிஷ்ணு குறித்து எம்பி. தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இப்போது கஷ்டப்படுவதற்கு போன ஜென்மத்தில் செய்த பாவம் என பள்ளிக்கூடத்தில் ஒருவர் பேசியுள்ளார். அதை நம்மால் ஏற்க முடியுமா? நம் பிள்ளைகளை பள்ளிக் கூடத்தில் நாம் படிக்க வைப்பதே அவர்கள் படித்து முன்னேறி அறிவியல்பூர்வமாக சிந்தித்து அடுத்த தலைமுறையை முன்னேற்றுவார்கள் என்பதற்காகத்தான்.
எவ்வளோ பெரியார் வந்தாலும் இந்த மாதிரி ஒருத்தன், ரெண்டு பேரு வந்து நம்மை பின்னுக்குத் தள்ளி மூடநம்பிக்கையில் மூழ்கடிச்சிடுவாங்க. நம் தமிழ்நாட்டை கஷ்டப்பட்டு முன்னேற்றினாலும் நம்மை பின்னுக்கு தள்ளுகிறார்கள். கர்நாடகாவில் படிக்காத சாமியார்கள் பிறந்த பெண் குழந்தைகளை நரபலி கொடுத்தார்கள்.
மூத்த ஆண் குழந்தையை நரபலி கொடுத்தார்கள். அதனால் அந்த மாநிலத்தில் மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications