கடைசிவரை பார்க்காத அமித்ஷா.. தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்களை சந்திக்க மறுப்பா..டெல்லியில் என்ன நடந்தது?
சென்னை: டெல்லியில் தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்க மறுத்ததாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாடு பாஜகவில் தற்போது பல்வேறு கோஷ்டி மோதல்கள் நிலவி வருகின்றன. தேர்தல் நிதியை செலவு செய்தது தொடர்பான விசாரணை தொடங்கி அதிகார மோதல் வரை பல பூசல்கள் தமிழ்நாடு பாஜகவில் நிலவி வருகின்றன.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பிரிந்து கிடப்பதாகவும், சில நிர்வாகிகள் பேசிக்கொள்வது கூட இல்லை என்றும் தகவல்கள் வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் காரைக்குடி பாஜகவில் கோஷ்டி மோதல் பெரிதாக வெடித்ததும் குறிப்பிடத்தக்கது.

எச். ராஜா
தேர்தல் செலவிற்காக பாஜக கொடுத்த நிதியை எச். ராஜா செலவு செய்யாமல், வீடு கட்ட பயன்படுத்தினார். 4 கோடி ரூபாயை முறைகேடு செய்துவிட்டார் என்று காரைக்குடி பாஜகவினர் எச். ராஜா மீது புகார் வைத்தனர். எச். ராஜாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்குடி நிர்வாகிகள் பலர் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இது தொடர்பாக தற்போது விசாரணை நடத்தப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை
தேர்தல் செலவினம் குறித்து எல் முருகன் ஒரு பக்கம் விசாரணை நடத்தும் நிலையில், இன்னொரு பக்கம் தேசிய பாஜக தலைமையும் விசாரணை நடத்தி வருகிறது. தமிழ்நாடு பாஜகவில் என்னதான் நடக்கிறது, ஏன் கட்சி பூசல் பட்டவர்த்தமாக வெளியே வந்துள்ளது, தேர்தல் நிதியை நிர்வாகிகள் என்னதான் செய்தார்கள் என்று தேசிய தலைமை கேள்வி எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர்களிடம் இது தொடர்பாக தேசிய தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

சந்திப்பு
இப்படி தேசிய பாஜக தலைகள் பலர் தமிழ்நாடு பாஜக மீது அதிருப்தியில் இருந்த போதுதான் தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும் பிரதமர் மோடியை திடீரென சந்தித்தனர். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர். காந்தி மற்றும் சி.கே. சரஸ்வதி ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் இந்த சந்திப்பில் உடன் இருந்தார். தேர்தல் வெற்றிக்கு ஆசி வாங்கவும், அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் இவர்கள் டெல்லி சென்றனர்.

ஆனால் என்ன
இந்த சந்திப்பில் தமிழ்நாடு பாஜகவில் நிலவும் கோஷ்டி மோதல் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த சந்திப்பிற்கு பின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்கள் சந்திக்க முயன்று உள்ளனர். ஆனால் தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்களை அமித் ஷா சந்திக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

காத்திருப்பு
அமித் ஷாவின் அப்பாயின்மென்ட் கேட்டு 3-4 நாட்களாக இவர்கள் காத்து இருந்தனர். ஆனால் இவர்கள் எவ்வளவு காத்து இருந்தும் கூட அமித் ஷா சந்திக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. காக்க வைத்துவிட்டு, அதன்பின் பாஜக எம்எல்ஏக்களை அமித் ஷா சந்திக்க மறுத்துவிட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிகின்றன. இதற்கு 2 முக்கிய காரணங்கள் இருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிகின்றன.

டெல்லி
அதன்படி தமிழ்நாடு பாஜகவில் நிலவும் கோஷ்டி மோதலை அமித் ஷா விரும்பவில்லை. இதன் காரணமாக எம்எல்ஏக்களை சந்திக்க மறுத்துவிட்டார் என்கிறார்கள். அதோடு தேர்தல் தோல்வியை அமித் ஷா விரும்பவில்லை, பாஜக இன்னும் நன்றாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற அதிருப்தியில் அமித் ஷா இருப்பதாக தெரிகிறது.

மறுப்பு
இதன் காரணமாக பாஜக எம்எல்ஏக்களை சந்திக்க அமித் ஷா மறுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. அவரை சந்திப்பதற்காக காத்திருந்த எம்எல்ஏக்கள் பின்னர் ஏமாற்றத்துடன் தமிழ்நாடு திரும்பி வந்ததாக டெல்லி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். உண்மையில் என்ன நடந்தது, அப்பாயின்மென்ட் கேட்டும் அமித் ஷா கொடுக்கவில்லையா என்பது வரும் நாட்களில் உண்மை வெளியே வரலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications