நள்ளிரவில் போனை போட்டு பேசிய அன்புமணி? இது எப்போ? தைலாபுரத்தில் இன்று ஆலோசனை கூட்டம்.. பாமக பரபரப்பு
சென்னை: பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நேற்றைய தினம் அன்புமணி புறக்கணித்த நிலையில், இன்றைய தினம் தைலாபுரத்தில் இன்று பாமக இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அணிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 11ம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதை நான் முடிவு செய்வேன்.. கட்சியில் நிறையபேர் உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும் அனைவரின் கணக்கையும் முடித்து விடுவேன்" என்றார்.

பாமக மா.செ. கூட்டம்
இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி உள்பட பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என பலர் புறக்கணித்தனர்.
கவுரவத் தலைவர் ஜி.கேமணி உள்ளிட்ட ஒருசில நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டனர். பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வரவில்லை. மொத்தமாக 230 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 13 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். குறைவான நிர்வாகிகளே வந்திருந்த நிலையிலும், கூட்டம் நடந்தது.
யோசனைகள் 50 தொகுதி
அப்போது பேசிய ராமதாஸ், "2026 சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக் கொள்வதற்கான கூட்டம் இது.. கட்சி நலனுக்காக 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும், ஆட்சி அமைக்க வேண்டும். 50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கான வித்தைகளை இன்றைய கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு சொல்லிக் கொடுத்தேன். எதிர்வரும் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாமக கூட்டணி அமைத்தே போட்டியிடும்.
அண்மையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாநாட்டு பணிகளில் இருந்த கட்சி நிர்வாகிகள் கலைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்திற்கு வரவில்லை. இதற்காக நிர்வாகிகள் யாரையும் கட்சி பதவியிலிருந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் விருப்பப்பட்டால் கட்சி பதவியில் இருந்து வெளியேறலாம். செயல்பட முடியவில்லை என யாரேனும் தெரிவித்தால் அவர்கள் விரும்பியபடி மாற்றப்படுவார்கள்.
சிங்கத்தின் கால்கள்
கட்சிக்குள் அப்பா - மகன் என்ற கோஷ்டி பிரச்சனை ஏதுமில்லை. கூட்டத்தில் பங்கேற்க செயல் தலைவர் அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சிங்கத்தின் கால்கள் பழுதாகாதபோது. சீற்றம் இன்னும் அதிகமாகத் தானே இருக்கும். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது" என்றார்.
ராமதாஸ் இவ்வாறு சொன்னாலும், 180 நிர்வாகிகள் பங்கேற்க வேண்டிய கூட்டத்தில் வெறும் 40 பேர் மட்டுமே நேற்றைய தினம் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகிறது. அன்புமணி ஆதரவாளர்கள் புறக்கணித்தால், காலை 10 மணிக்குத் தொடங்க வேண்டிய கூட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கி, 2 மணி நேரம் மட்டுமே நடைபெற்றது.
சித்தாந்த இடைவெளி
அன்புமணி தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க, ராமதாஸ் திமுக அல்லது அதிமுக என ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக கூறப்படுகிறது. பாமகவின் இந்த சித்தாந்த இடைவெளி அதிகமாகியிருக்கும் நிலையில், அன்புமணி சொன்னதால்தான், மற்ற மாவட்ட செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் முணுமுணுப்புகள் எழுகின்றன.
போனை போட்ட அன்புமணி
அதாவது, தென் மாவட்டத் தலைவர்களும், செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு தைலாபுரத்திற்கு கிளம்பினார்களாம்.. ஆனால் அவர்களுக்கு போனை போட்டு பேசியிருக்கிறார் அன்புமணி.
அதாவது, "ஆலோசனை கூட்டத்திற்கு எனக்கே முறைப்படி அழைப்பு வரவில்லை. அதனால் இந்த கூட்டத்தில் நீங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது. பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்பி செல்லுங்கள். முறையான கூட்டத்திற்கு பிறகு அழைப்பு விடுக்கப்படும். அப்போது கலந்து கொண்டால் போதும். இன்றைய கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம். ஒருதலைபட்சமாக நடக்கும் கூட்டத்தை நாம் புறக்கணிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நமது பலம் தெரிய வரும்" என்றாராம்..
உடனே நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பாதிவழியிலேயே பயணத்தை ரத்து செய்து, தங்களது ஊருக்கு நள்ளிரவே திரும்பிவிட்டார்களாம். எனவே, அன்புமணியே இதற்கு காரணம் என்கிறார்கள்.
இன்றுகாலை கூட்டம்
இன்றுகாலை கூட்டம்
ஆனால், மற்றொரு தரப்பினரோ, இது அப்பா மகன் பிரச்சனை கிடையாது, மாமனார், மருமகள் இடையேயான பிரச்சனை, இதற்கெல்லாம் காரணம் முகுந்தனுக்கு கட்சியில் முக்கியத்துவம் தந்துதான் என்றும் சிலர் கொளுத்தி போட்டு வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், தைலாபுரத்தில் இன்று பாமக இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அணிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் துவங்கியிருக்கிறது.
பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனையா? குடும்ப பிரச்சனையா? அதிகார மோதலா? என தெரியவில்லை.. ஆனால், தற்சமயம் அன்புமணியின் கை லேசாக ஓங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது..!!












Click it and Unblock the Notifications