விட்றாதீங்க "அவரை", கெட்டியா பிடிச்சுக்குங்க.. ஓபிஎஸ்ஸிடம் சொன்னாராமே ஸ்டாலின்.. அட குறுக்கே எடப்பாடி
ஓபிஎஸ் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்தபோது, என்ன பேசினார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது
சென்னை: கிரீன்வேஸ் சாலையில் உள்ள, ஓபிஎஸ் வீட்டிற்கு, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சென்றிருந்த நிலையில், அன்றைய தினம் என்ன நடந்தது? தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்த முக்கிய தகவல்கள் பரபரத்து வருகின்றன.. என்ன நடந்தது ஓபிஎஸ் வீட்டில்?
பொதுவாக ஒரு அரசியலில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அல்லது எதிர் சித்தாந்தத்தில் பயணித்தாலும் சரி, மரியாதை நிமித்தமான சந்திப்புகள் நடைபெறுவது என்பது தமிழகத்தில் நடக்கக்கூடிய வழக்கமான ஒன்றுதான்..
சொந்த கட்சியையும் தாண்டி, தமிழக அரசியல் தலைவர்கள், இன்ப, துன்பங்களில் பங்கேற்று, அரசியல் நாகரீகங்களை அவ்வப்போது இழையோடவிட்டு வருவது, மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் சமீபகாலமாகவே தந்து கொண்டிருக்கிறது..

ரங்கராஜ் பாண்டே
அந்தவகையில்தான், பாஜக ஆதரவாளரான ரங்கராஜ் பாண்டே வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்த நிகழ்வும் பார்க்கப்பட்டது.. பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் அப்பா, ரகுநாதாசார்யா காலமான நிலையில், முதல்வர் ஸ்டாலின், பாண்டேவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.. ரங்கராஜ் பாண்டேவின் கையை இறுக்கமாக பற்றி ஆறுதலையும் சொல்லியிருந்தார்.. இதுகுறித்து, முதல்வரும், ட்வீட் போட்டு பதிவிட்டும் இருந்தார்.. அதேபோல, சில நாட்களுக்கு முன்புகூட, சென்னையில் ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று, தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.

நெகிழ்ச்சி தருணம்
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், அடுத்த சில நாட்களில், ஓபிஎஸ் சென்னை திரும்பியிருந்தார்.. இந்நிலையில், கடந்த மார்ச் 17ம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்தார்.. அவருடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்றார்.. ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு, இரங்கல் அறிக்கையை முதல்வர் வெளியிட்டிருந்தாலும், ஓபிஎஸ்சை சந்தித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கவே நேரில் சென்றிருந்தார்.. இந்த நிகழ்வு ஓபிஎஸ்சிற்கு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்திருந்தது..

மனோஜ் பாண்டியன்
காரணம், இரங்கல் அறிக்கை மட்டும், மிக தாமதமாக வெளியிட்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து யாருமே நேரில் வந்து ஆறுதல் சொல்லவில்லை.. அந்தவகையில் ஸ்டாலினின் வருகையானது, ஓபிஎஸ் தரப்பை நெகிழ வைத்தது.. இந்த சந்திப்பின்போது, மூத்த தலைவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் வீட்டில்தான் இருந்தனர்.. அன்றைய தினம், ஓபிஎஸ் வீட்டில் என்ன நடந்தது? தலைவர்கள் என்ன பேசினார்கள்? என்பது குறித்த சில தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.. ஓபிஎஸ்சிடம் அவரது அம்மாவை பற்றி ஸ்டாலின் விசாரித்திருக்கிறார்..

கலைஞர் கருணாநிதி
அதற்கு ஓபிஎஸ், தன்னுடைய அம்மாவுக்கு 98 வயது என்பதையும், ஜெயலலிதாவோடு தன் தாய்க்கு இருந்த பாசத்தையும் விவரித்திருக்கிறார்.. 98 வயதில் மரணம் என்பதை கேட்ட முதல்வர் ஸ்டாலின், நிறைவான வாழ்க்கையை அம்மா வாழ்ந்துள்ளார் என்று புகழ்ந்தாராம். பிறகு, கொஞ்ச நேரம், அரசியல் ரீதியாக இவர்கள் அனைவரும் பேசியிருக்கிறார்கள்.. அப்போது, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்து எம்ஜிஆர் அரசை, கலைஞர் ஆட்டிப்படைத்த சில சம்பவங்களை சொல்லி சிலாகித்தாராம் பண்ருட்டி ராமச்சந்திரன்.. அதனை எல்லாம் ரசித்தவாறே கேட்டுக் கொண்டிருந்தாராம் ஸ்டாலின்..

கெட்டியா பிடிச்சுக்குங்க
பிறகு ஓபிஎஸ்ஸிடம், "உங்களுக்கு மிகப்பெரிய பலம் பண்ருட்டியார். அவரை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள்" என்று சொன்னாராம் ஸ்டாலின்.. இதற்கு பிறகு, அதிமுக பொதுக்குழு வழக்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ்ஸிடம் விசாரித்திருக்கிறார்.. அனைத்தையும் கேட்டறிந்த பிறகு, "டெல்லியில் வலுவான லாபியை "அவர்" வைத்திருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்" என்றாராம்.. அரசியல் ரீதியாக பேசி முடித்த நிலையில், அப்படியே இவர்களின் பேச்சு மெல்ல, கொடநாடு கேஸ் பற்றியும் திரும்பியிருக்கிறது.. கொடநாடு விசாரணை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தாராம் ஓபிஎஸ்.. இப்படியாக, அன்றைய தினம் சந்திப்பின்போது, நடந்த சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள் ஓபிஎஸ்சுக்கு நெருக்கமானவர்கள்...!!












Click it and Unblock the Notifications