பொய் செய்தி பரப்பினாரா ராமதாஸ்? தமிழகம் 3ஆவது இடம் போனது ஏன்?
சென்னை: டாக்டர் ராமதாஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் பொய்யான செய்தியைப் பரப்பி வருவதாக திமுகவைச் சேர்ந்த உடன் பிறப்புகள் பலர் சமூக ஊடகத்தில் கருத்திட்டு வருகின்றனர்.
திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்காதது ஏன் என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்தியாவில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் இரண்டாவது இடத்திலிருந்த தமிழ்நாடு இந்த ஆட்சிக் காலத்தில் 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதை எக்ஸ் தள பதிவில் சுட்டிக் காட்டி இருந்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கல்லூரி கூட புதியதாக திறக்கப்படாததால் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது என்றும் கூறியிருந்தார். டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில்,. "2023-24ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் 11,650 ஆக இருந்தன. கடந்த ஒரு 400 புதிய இடங்கள் மட்டும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தனியார் கல்லூரிகள்.
இதேகாலத்தில் மிகவும் பின் தங்கிய மாநிலம் என்று கூறப்படும் உத்தரப்பிரதேசம் 2522 புதிய இடங்களை உருவாக்கி , தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மராட்டியம் 1000 புதிய இடங்களையும், ராஜஸ்தான் 900 புதிய இடங்களையும், தெலுங்கானா 550 இடங்களையும் உருவாக்கியுள்ளன. கடந்த ஓராண்டில் புதிய இடங்களை உருவாக்குவதில் தமிழ்நாடு ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் கர்நாடகம் 800 புதிய இடங்களை உருவாக்கி இருக்கிறது" என்று அவர் விரிவான அறிக்கையை எடுத்துக் காட்டி இருந்தார்.
இவரது அறிக்கைக்கு முன்னதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தது. அதில், கடந்த 2023-24 ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் கர்நாடக மாநிலம் முதல் இடத்தைப்பிடித்திருக்கிறது. அதாவது இந்த நிதிநிலை ஆண்டில் 11,745 மாணவர்கள் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அதே 2024-25 ஆண்டிற்கான சேர்க்கை 12,545 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இந்திய அளவில் கர்நாடகா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் உபி பிடித்துள்ளது. 2023-24 ஆண்டில் 9,903 மாணவர்கள் மட்டுமே இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்திருந்த நிலையில், 2024-25 இல் 12,425 ஆக அது உயர்ந்துள்ளது.
ஆனால், தமிழ்நாடு 2023-24 கால பகுதியில் 11,650 ஆக இருந்த நிலையில் தற்போது நடப்பு ஆண்டில் அது 12,050 ஆக உயர்ந்து இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்தப் பட்டியலில் இருப்பதிலேயே 10வது இடத்தில் கேரளா உள்ளது. அம்மாநிலத்தில் நடப்பு ஆண்டில் 4,905 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளன. கடந்த 2023-24 இது 4,655 ஆக இருந்துள்ளது.

இதைக் கொண்டுதான் டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். ஆனால், அவரது அறிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக சமூக ஊடகத்தில் உடன் பிறப்புகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். டாக்டர் தேவா என்பவர் ராமதாஸ் செய்தியை மறுக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பழைய செய்தியைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதில் தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்க திமுக அரசு அனுமதி கேட்டும் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்பதைக் கூறியிருக்கிறார்.
மேலும் 11 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 50 மாணவர்களைச் சேர்க்க அனுமதி கோரப்பட்டதாகவும் அதை மத்திய அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் சுட்டிக் காட்டி இருக்கிறார். அதாவது மத்திய அரசு புதியதாக உருவாக்கப்பட உள்ள 550 இடங்களுக்கு அனுமதி அளித்திருந்தால் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்று இருக்கும் என்றும் தனது பதிவில் கூறி இருக்கிறார்.
ஒருவேளை அனுமதி கிடைத்திருந்தால் தமிழகம் இளங்கலை மருத்துவ சேர்க்கையில் 12,600 இடங்களைப் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கும் என்கிறது அவரது வாதம். ஆக, பாஜக அரசைக் கண்டிக்காமல் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசை குறைசொல்கிறார். அவர் பொய்யான செய்தியைப் பரப்பி வருகிறார் என்று பலரும் வாதிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications