இனிமே தேறாது.. பாமக வேண்டாமுங்க.. போட்டு விளாசிய எடப்பாடி? அப்போ அன்புமணி? மொத்தமாக போச்சா?
சென்னை: பாமக கூட்டணியே வேண்டாம் என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அவருக்கு நெருக்கமான அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணி அமைத்து திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டம் ஒன்றில் முழக்கமிட்டு இருந்தார்.இப்படிபட்ட நிலையில்தான் சமீப நாட்களாக நடக்கும் விஷயங்களை பார்த்தால் எங்கே அதிமுக மெகா கூட்டணி மட்டுமல்ல சாதாரண சின்ன கூட்டணியே கூட அமைக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ண தோன்றுகிறது.

ஒரு பக்கம் அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கு இடையில் கடுமையான கருத்து மோதல் உள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி கருத்து தெரிவித்து மோதி வருகின்றனர். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி என்ன ஆகும் என்பதே ஒரு பக்கம் கேள்வியாக உள்ளது. இன்னொரு பக்கம் பாமகவிற்கான கதவை எடப்பாடி அடைத்துவிட்டதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி: கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி மேலும் கரைந்தது. பாமக முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதன்பின் நயினார் நாகேந்திரன் எடப்பாடி - ஓ பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்ததால் பாஜக - அதிமுக கூட்டணியும் உடைந்தது.
சமீபத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள். பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார் என்று வெளிப்படையாக திமுகவிற்கு ஆதரவாக கூறினார். இதனால் திமுகவோடு பாமக கூட்டணி வைக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் சொன்ன அன்புமணி, திமுகவோடு கூட்டணி இல்லை. அதிமுகவுடனும் கூட்டணி இல்லை. நாங்கள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம், என்று கூறினார்.
பாமக முற்றுப்புள்ளி: அதன்பின் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட.. நாங்கள் அதிமுகவின் கூட்டணியில் இல்லை. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று கூறினார்.
அதிமுகவுடன் இணையும் எண்ணத்தில் பாமக இல்லை. உடைந்த அதிமுகவில் இணைந்தால் பயன் இல்லை என்று நினைக்கிறார். எடப்பாடியும் இன்னும் தான்தான் ஒட்டுமொத்த அதிமுக என்பதை நிரூபிக்கவில்லை. தொண்டர்கள் எல்லோரும் தன் பக்கம் இருக்கிறார்கள். தேர்தலில் நின்றால் வெற்றிபெறுவேன் என்பதை எடப்பாடி நிரூபிக்கவில்லை. இதனால் பாமக இவர்களுடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்வி உள்ளது.
எடப்பாடி கோபம்: இன்னொரு பக்கம் பாமக மீது எடப்பாடியும் கோபத்தில் இருக்கிறாராம்.. அவர்கள் சொல்லித்தான் இடஒதுக்கீடு கொடுத்தோம். அது நமக்கே எதிராக போய்விட்டது. இப்போதுவரை தென் தமிழ்நாட்டில் நாம் கால் வைக்கவே முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது.அவர்கள் இப்போது நம்முடன் கூட்டணி இல்லை, பாஜகவுடன்தான் கூட்டணி என்கிறாரக்ள்.
அவர்கள் என்ன சொல்வது.. நாம் சொல்வோம்.. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் இல்லை என்று எடப்பாடி காட்டமாக சொன்னதாக கூறப்படுகிறது. அதோடு பாமகவில் தற்போது அன்புமணி- ராமதாஸ் இடையே கருத்து மோதல் இருக்கிறதாம். இதனால் உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் பாமகவுடன் கூட்டணி வைப்பதெல்லாம் உதவாது என்று எடப்பாடி நினைக்கிறாராம்.












Click it and Unblock the Notifications