Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘மெடிக்கல் மினிஸ்டர்' பதவி தர மறுத்த கருணாநிதி? எம்.ஜி.ஆர் கிளப்பிய ஊழல் புகார்.. உடைந்த திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா காலத்திலிருந்தே திமுகவின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வந்த எம்.ஜி.ஆரை, 1971 தேர்தல் வெற்றிக்குப் பின் ஓரங்கட்டும் வேலையை மு.கருணாநிதி செய்யத் தொடங்கினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் எம்.ஜி.ஆருக்கு அமைச்சராகும் ஆசை எழுந்தது. 71இல் காமராஜர் மற்றும் ராஜாஜி 'மகா கூட்டணி' தான் வெற்றி பெறும் என அரசு உயர்மட்ட அதிகாரிகளிடையே ஒரு கருத்துப் பரவல் இருந்தது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே சில அதிகாரிகள் ரகசியமாக காமராஜரைச் சந்தித்து வாழ்த்தியதாகவும் செய்திகள் கசிந்தன.

இத் தேர்தலில் காமராஜர் - ராஜாஜி கூட்டணியை மக்கள் புறக்கணித்தனர் என்பதைவிடக் குழி தோன்றி புதைத்தனர் எனக் கூறும் அளவுக்கு திமுக 'மாற்றுக் கூட்டணி' அலை தமிழ்நாட்டில் வீசியது. அந்தளவுக்கு மத்திய அரசுடன் ஒரு இணக்கமான நிலையை மு.க. உருவாக்கி இருந்தார்.

Did Karunanidhi Refuse to Grant Medical Minister Portfolio MGR Alleged Corruption The Split in the DMK

இந்திரா காந்தி கொடுத்த விளக்கம்

திமுகவுடன் நல்லுறவு கொண்டிருந்த இந்திரா காந்தி இலங்கை சென்றிருந்தபோது, 'பிரிவினைவாதம் கொள்கையில் பிடிவாதமாக உள்ளவர் கருணாநிதி. எனவே உறவு பலப்படுமா?' எனக் கேள்வி எழுப்பிய ஊடகங்களிடம் இந்திரா காந்தி, 'திமுக பிரிவினையை எப்போதோ கைவிட்டுவிட்டது. எனவே கவலை தேவையில்லை' என்று நம்பிக்கை அளித்திருந்தார்.

இந்திரா காந்திக்கு எதிராக அலை வீசுவதாக காமராஜ் நம்பினார். ஆனால், நாட்டின் இரண்டு முதுபெரும் தலைவர்கள் இத்தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தனர். இரண்டாவது முறையாக 1971 மார்ச் 15 ஆம் தேதி பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இரண்டாவது முறையாக மு.கருணாநிதி முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

விழா ஏற்பாடுகள் தொடங்கியபோதே, காஷ்மீர் படப்பிடிப்பிலிருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் தொலைப்பேசியில் கருணாநிதியை அழைத்து, தனக்கு 'மெடிக்கல் மினிஸ்டர்' பதவி தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நடிப்புத் துறையில் அவர் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அமைச்சரவையில் இடமளிக்க முடியுமா? என ஒரு கேள்வி எழுந்தது. அதற்கு சட்ட விளக்கம் கேட்கலாம் அன்பழகன் கூறினார். நடிப்புத் தொழிலை விட்டு விலகினால் மட்டுமே அமைச்சராக முடியும். இல்லையேல் 'ஆபீஸ் ஆஃப் பிராஃபிட் ஆக்ஷன்' விதிப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என முடிவு கிடைத்தது. ஆகவே கேபினர் அந்தஸ்து உள்ள மாநில சிறுசேமிப்புத் திட்டத்தின் துறைத் தலைவர் பதவியை எம்.ஜி.ஆருக்கு வழங்கினார் கருணாநிதி.

அமெரிக்கா ரிட்டர்ன் கருணாநிதி

ஆட்சி சுமுகமாகப் போகிறது என நம்பிக்கொண்டிருந்த நிலையில்தான் 1971 டிசம்பர் 3 ஆம் நாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி இந்தியாவில் அவசரநிலையை பிரகடணம் செய்தார். அமெரிக்கப் பயணத்திலிருந்த கருணாநிதி டிசம்பர் 5 ஆம் தேதி சென்னைக்குத் திரும்பினார்.

முன்னதாகவே எம்ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் கட்சிக்குள் மோதல் போக்கு உண்டாகி இருந்தது. அவர் அக்டோபர் மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. 'ஹிந்து' நிருபர், 'சின்னவரைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள். அதற்கு அவரது கருத்து என்ன?' என்று கேட்டு டெலிபோன் செய்தார். எம்.ஜி.ஆர் உதவியாளர் மகாலிங்கம் அழைப்பை ஏற்றார். அவர் சத்யா ஸ்டுடியோவில் உள்ளதாகச் சொன்னார். அவசரமாக விளக்கம் வேண்டும் என்றார் நிருபர், மகாலிங்கம் சத்யா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆரின் பர்சனல் நம்பர் 70602க்கு அழைத்து விவரம் சொன்னார். அது மதிய சாப்பாட்டு நேரம். ஆகவே எம்.ஜி.ஆர்., "பாயசம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என சொல்லவும்" என்றார். அது தலைப்புச் செய்தியானது.

எம்.ஜி.ஆரை ஓரங்கட்டத் தனது மகன் மு.க.முத்துவை வெள்ளித்திரையில் ஒளிரவிட்டார் கருணாநிதி. மகன் தன் பங்குக்கு எம்.ஜி.ஆரை திரையில் நகல் செய்தார். எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் மறைமுகமாக காவல்துறை துணையோடு விலைபேசி முத்து மன்றமாக மாற்றும் முயற்சிகளில் ஆளும் அரசு ஈடுபட்டது. இது எம்.ஜி.ஆரை மேலும் சீண்டிப் பார்த்தது.

திமுகவுடன் கொண்டுள்ள உறவைத் துண்டித்துக் கொள்ளப்போவதாக மிரட்டினார். 700 ரசிகர் மன்ற செயலாளர்களுக்கு அரசு அழுத்தம் தந்து. எம்.ஜி.ஆரின் அறிவிப்புக்கு அஞ்சி முத்து ரசிகர் மன்றங்களைக் கலைக்க உத்தரவிட்டார் கருணாநிதி. இதன் பின்பும் பூசல் அதிகரித்தது.

எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பற்றி, "வாய்மைக்குச் சோதனை ஏற்பட்டபோது அசைந்து கொடுக்காமல், பணிந்துபோகாமல் துணிச்சலுடன் நின்றவர் எம்.ஜிஆர். கொஞ்சக் காலமாகவே அவர் மூன்று உண்மைகளை வற்புறுத்தி வருகிறார். 1.திமுக ஆட்சியில் யதேச்சாதிகாரம் ஓங்கி வருகிறது. 2. லஞ்சம், ஊழல் மலிந்து வருவதாகச் சந்தேகம் வலுத்து வருகிறது. 3. மதுவிலக்கை ரத்து செய்தது தவறு. இந்த மூன்று உண்மைகளைப் பேசியதற்காகவே எம்.ஜி.ஆர் பழிவாங்கப்படுகிறார். ஆனால், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கட்சியைப் பாதுகாக்க என்று கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அண்ணாவின் கொள்கையிலிருந்து கழகம் விலகிப்போகிறது. அது தவறில்லையா?" எனத் தேசிய ஆதரவுப் பத்திரிகை எழுதியது.

"எம்.ஜி.ஆரை விலக்குவதும் சேர்ப்பது ஒரு கட்சியின் சொந்த விஷயம் என்றாலும் சொத்துக் கணக்குக் கேட்டவுடனே விலக்கியது நல்ல காரியமாகப் படவில்லை" என்றது.
திமுக அமைச்சர்கள் தங்களின் சொத்துகளை வெளிப்படையாகக் கணக்குக் காட்டவேண்டும் என எம்.ஜி.ஆர் கேட்டார். ஆனால், திமுக, 'நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துக் கணக்குகளை வெளிப்படையாக அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனப் பிரச்சனையைத் திசை திரும்பியது.

"எம்.ஜி,ஆர் மீது கழகம் நடவடிக்கை எடுத்து வரைக் கட்சியிலிருந்து வெறியேற்றியிருப்பதால் அவருக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை. மாறாக அவரது கெளரவமும் மதிப்பும் பன்மடங்கு உயரவே செய்கிறது. திமுகவுக்குத்தான் இச்சம்பவத்தால் பெரும் நஷ்டம்" எனக் கணித்து எழுதியது 'கல்கி'. இந்தக் கருத்தே மக்களின் கருத்தாகவும் வருங்காலங்களில் அமைந்தது. அடிக்கடி 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்பார் கருணாநிதி. அந்த மகேசர்கள் திமுகவுக்குத் தக்க பாடம் புகட்டினார்கள்.

எழுதியவர்: கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+