ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கிய தவெக அரசு? வெள்ளை அறிக்கை சொல்வது என்ன?
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது நிதிப் போர் களமாக மாறியிருக்கிறது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு நேற்று வெளியிட்ட நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, ஒட்டுமொத்த மாநிலத்தையும் உற்றுநோக்க வைத்திருக்கிறது.
குறிப்பாக, முந்தைய திமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கும், தற்போதைய நிதியமைச்சர் என். மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கைக்கும் இடையே உள்ள '3 லட்சம் கோடி ரூபாய்' கடன்தொகை வித்தியாசம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இப்போது எழும் முதன்மையான கேள்வி: "திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட கடைசி பட்ஜெட்டில் 10 லட்சம் கோடி என்று சொல்லப்பட்ட கடன், தவெக ஆட்சியில் 13.18 லட்சம் கோடியாக மாறியது எப்படி? ஒரே மாதத்தில் தவெக அரசு 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியதா?" இதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான பொருளாதாரக் காரணங்கள் மற்றும் தரவுகளை விரிவாகப் பார்ப்போம்.
பட்ஜெட் கணக்கும், வெள்ளை அறிக்கையின் 'நிஜ' கணக்கும்
கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த தங்கம் தென்னரசு, தமிழகத்தின் நேரடிக் கடன் 2026-27 நிதியாண்டில் சுமார் 10.71 லட்சம் கோடி ரூபாயைத் தொடும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், நேற்று புதிய நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலோ, தமிழகத்தின் ஒட்டுமொத்த நிதியியல் பொறுப்புகள் (Total Financial Liabilities) 13.18 லட்சம் கோடி ரூபாயாக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஒரே மாதத்தில் புதிய அரசு இந்த 3 லட்சம் கோடியைக் கடன் வாங்கவில்லை. வெள்ளை அறிக்கை விளக்கும் கணக்கு முற்றிலும் வேறானது:
நேரடிக் கடன் (Direct Debt): முந்தைய திமுக அரசு காட்டிய 10 லட்சம் கோடி ரூபாய் என்பது, தமிழக அரசு சந்தை மூலமாகவும், பிற நிதி நிறுவனங்கள் மூலமாகவும் நேரடியாகப் பெற்ற கடன்கள் மட்டுமே. இதனை வெள்ளை அறிக்கையும் ஒப்புக்கொள்கிறது (மார்ச் 2026 நிலவரப்படி நேரடிக் கடன் கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி).
மறைமுகக் கடன் (Off-Budget & PSU Borrowings): இந்த 10 லட்சம் கோடியைத் தவிர, அரசின் உத்தரவாதத்தோடு மின்சார வாரியம் (TNEB/TNPDCL), அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) வாங்கிய கடன்கள் சுமார் 3.18 லட்சம் கோடி ரூபாய் உள்ளது.
மின்சாரத் துறையின் பெரும் சுமை: பொதுத்துறை நிறுவனங்களின் 3.18 லட்சம் கோடி கடனில், மின்சாரத் துறை மட்டுமே 2.47 லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்துள்ளது. இதில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) கடன் மட்டும் 1.07 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
அதாவது, முந்தைய அரசு தங்களின் பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களை உள்ளடக்காமல் 'நேரடிக் கடனை' மட்டுமே காட்டியது. ஆனால், புதிய தவெக அரசு, "இந்த பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களுக்கும் அரசே பொறுப்பு, எனவே இதையும் சேர்த்தால்தான் உண்மையான கடன் சுமை தெரியும்" என்று கூறி 13.18 லட்சம் கோடி என்ற முழுத் தொகையையும் மக்கள் முன் வைத்துள்ளது.
முந்தைய திமுக அரசின் விளக்கம் என்ன?
இந்த வெள்ளை அறிக்கை வெளியான உடனே, முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். இதனை "வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை மற்றும் ஏமாற்று வேலை" என்று அவர் விமர்சித்துள்ளார்.
அவரது வாதத்தின்படி, தேர்தல் சமயத்தில் தவெக அரசு மக்களுக்குக் கொடுத்த 'வண்ணமயமான வாக்குறுதிகளை' நிறைவேற்ற முடியாமல், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்கவே இந்த வெற்று அறிக்கையை ஒரு 'கேடயமாகப்' பயன்படுத்துகிறது. மாநிலத்தின் நிதிநிலை ஏற்கனவே பட்ஜெட்டில் தெளிவாக விளக்கப்பட்ட ஒன்றே தவிர, இதில் புதிதாகக் கண்டுபிடிப்பதற்கு எதுவும் இல்லை என்றும் திமுக தரப்பு குற்றம் சாட்டுகிறது.
அரசியல் வியூகம்
பொருளாதார ரீதியாகப் பார்த்தால், புதிய அரசு இந்த வெள்ளை அறிக்கையைத் தனது முன்கூட்டிய அரசியல் அரணாக மாற்றியுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றக் கோரி மக்கள் அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க, "முந்தைய அரசு கஜானாவைத் காலி செய்துவிட்டுச் சென்றுள்ளது, கடன் சுமைக்குக் காரணம் அவர்கள்தான்" என்ற படத்தைக் காட்டி, கால அவகாசம் கோரும் உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது.
இருப்பினும், வருவாய் இழப்புகளைச் சரிசெய்து, வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறைகளில் இருக்கும் முறைகேடுகளைக் களைவதன் மூலம் இந்த ஆண்டே 20,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்றும் புதிய நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எது எப்படியோ, இந்த 13 லட்சம் கோடி கடன் விவாதம், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications